சகோதரக் கட்சிகட்கிடையிலான முரண்பாடுகளைக் கையாளுவது பற்றி

(புதிய-ஜனநாயகக் கட்சியின் சர்வதேச உறவுகள் கற்கைக் குழு வரைந்த ஆவணம்)

முன்னுரை
சில மார்க்சிய லெனினிய அமைப்புக்களிடையிலும் மார்க்சிய லெனினியப் பார்வையுடைய தனிமனிதர்களிடையிலும் பிரச்சினைகள் விவாதிக்கப்படும் விதத்தை நோக்கும் போது, முரண்பாடுகளைக், குறிப்பாக எதிரியுடன் சம்பந்தப்படாத முரண்பாடுகளைக், கையாள்வது பற்றித், தோழர் மாஓ சேதுங்கிடமிருந்து அவர்கள் அதிகம் கற்றுள் ளார்களா என்று எண்ணத் தேன்றுகிறது.

கருத்து முரண்பாடும் உடன்பாடின்மையும் கம்யூனிஸற்றுக்களுக்குப் புதியனவோ பழக்கமற்றனவோ அல்ல. தோற்றத்தில் ஆழமான கருத்து வேறுபாடுகள், கம்யூனிஸ்ற் கட்சிகட்குள் உரையாடலும் விவாதமும் கொண்டு தீர்க்கப்பட்டு, முடிவில் மேலுங் கூடிய ஒற்றுமைக்கு வழி செய்துள்ளன. கூரிய கருத்து முரண்பாடுகளிலும் மேலாகப், போதிய உரையாடல் இல்லாமையாலேயே பிளவுகள் நேர்ந்துள்ளன. உரை யாடலையும் விவாதத்தையும் மறுப்பதன் மூலம் பிறரை மேவ முற்பட்ட தனிமனிதர்கள் கணிசமான கேடு செய்துள்ளனர். எனினும், அகமுரண் பாடுகளைத், தேவைக்கமைய, உரையாடியோ விவாதித்தோ தீர்க்கும் விருப்பே, பொது விதியாக, மேலோங்கி இருந்து வந்துள்ளது. அச் செயல்முறையின் முக்கியமான ஒரு பகுதியாக விமர்சனமும் சுய விமர்சனமும் இருந்து வந்துள்ளன.

அமைப்பொன்றினுள் முரண்பாடுகளை ஜனநாயகமான முறையில் தீர்க்கும் செய்முறை, நல்ல கம்யூனிஸ்ற்றுக்களின் தலைமையிலான பரந்துபட்ட அமைப்புக்களினுள்ளும் குறுகியகாலக் கூட்டமைப்புக்களி; னுள்ளும் வெற்றி கண்டுள்ளது. ஏனெனில், நல்ல கம்யூனிஸ்ற்றுக்கள் பொதுத் தேவை பற்றிக் கவனமிழப்பதில்லை என்பதுடன் —அறிவிக்கப் பட்ட இலக்குக்களை அடைய வேறுபாடுகள் தடையாக அமையும் போதோ வஞ்சகத்தை எதிர்நோக்கும் போதோ அன்றிப் — பொதுவான நலன்கள் வேறுபாடுகளை மேவிநிற்பதை உறுதிப்படுத்தவே முனைகின் றனர்.

இடதுசாரிக் கட்சிகளினுள் ஏற்படும் பிளவுகள் வெளித்தெரிய நீண்ட காலம் எடுப்பதற்கான ஒரு காரணம், ஜனநாயக மத்தியத்துவ நடை முறையாகும். உரையாடியும் விவாதித்தும் முரண்பாடுகளைத் தீர்க்கும் முயற்சிகள் எப்போதுமே எடுக்கப்படடு வந்துள்ளன. சோவியத் கம்யூனிஸ்ற் கட்சிக்குள்ளும் சீனக் கம்யூனிஸ்ற் கட்சிக்குள்ளும் நடந்த பெரும் விவாதங்கள் மட்டுமன்றி, இரு கட்சிகட்கிடையிலும் தோழர் ஸ்தாலின், மக்கள் கம்யூன்கள், “சமாதான வழியில் சோஷலிசம்” என்பன தொடர்பான விவாதங்களும் கட்டுப்பாடான முறையில் நீண்ட காலமாக நடந்தன. மார்க்சியத்தின் இடத்தில் திரிபுவாதத்தைக் கொண்டு வருவதற்கு ஒரு சாட்டாகத், தோழர் ஸ்தாலின் மீது க்ருஷ்ச்செவ் நச்சுத்தனமான பகிரங்கத் தாக்குதலைத் தொடுத்த பின்பே, இரு கட்சிகட்கிடையிலும் பாரிய வேறுபாடுகள் இருந்தமை பகிரங்கமானது. அப்போதும், ஜனநாயக அடிப்படையில் உரையாடியும் விவாதித்தும் முரண்பாடுகளைத் தீர்க்கும் முயற்சிகள் தொடர்ந்தன. திரிபுவாதத்தை எதிர்த்த சகோதரக் கட்சிகட்கு எதிராக க்ருஷ்ச்செவ் கடைப்பிடித்த பகைமையான, சீண்டிவிடும் தன்மையுடைய அணுகு முறையே கடுஞ் சொற்கட்குக் காரணமாயிற்று. இங்கு கவனிக்க முக்கியமானது ஏதெனின், ஆழமான வேறுபாடுகளினிடையிலும் சமரசத் துக்கான வாய்ப்பு நாளாந்தம் மங்கிக் கொண்டிருந்த போதிலும், மார்க்சிய லெனினியவாதிகள் உள்ளக விவாதத்தைத் தொடர்ந்து நடத்தியதோடு, திரிபுவாத முகாம் தாக்கத் தொடங்கும் வரை சீண்டப் பட மறுத்தனர்.

பொதுவான அரசியற் சூழல் இடதுசாரிகட்குப் பாதகமாக இருக்கும் போதே பிளவுக்கான முனைப்பு வலுவாக இருக்கிறது. இது முரண் நகையானது. ஏனெனில், அவ்வாறான சூழலிலேயே கூடிய ஐக்கியமும் முரண்பாடுகளைக் களைவதற்குக் கனதியான முயற்சிகளும் புரட்சிகரப் பாட்டாளி வர்க்கக் கட்சியையும் இடதுசாரி இயக்கத்தையும் மீளக் கட்டியெழுப்புவதும் மிகவும் அவசியமாயுள்ளன. சந்தர்ப்பவாதத்துடனும் சாகசவாதத்துடனும் மார்க்சிய லெனினியவாதிகள் சமரசம் செய்ய இயலாது. அத்துடன் அத்தகைய போக்குக்கட்கு எதிராக உறுதியாக நிற்கவும் வேண்டும். எனினும் தவறுகளைக் களையும் வழி, பொறுமையான கலந்துரையாடலும் விவாதமுமே ஒழிய, அவசரத் தன்மையான மோதலல்ல. தவறான கருத்துக்கள் நட்பான ஜனநாயக முறையில் நீக்கப் படுகையில் தவறான கருத்துக்களைக் கெண்டோர் திருத்தப்படுமாறு முரண்பாடுகளைக் கையாளுவதற்கு —தவறான போக்குக்களையும் கருத்துக்களையும் அணைத்துச் செல்கிறதாக இல்லாமல்— மாற்றுக் கருத்துக்களை மதிக்கும் பண்பாடொன்று தேவைப்படுகிறது.

கட்சிக்குள்ளும் கட்சிகட்கு இடையிலுமான முரண்பாடுகள்
உள் முரண்பாடுகளைக் கையாளுவதில் மார்க்சிய லெனினியக் கடசிகள் பொதுவாகவே திறமையுடையனவாய் இருந்திருக்கின்றன. 1970களில் அரச ஒடுக்குமுறையை அடுத்து இந்திய மார்க்சிய லெனினிய இயக்கமும் 1971இல் குடிப்பொதுமைவாதிகளான மக்கள் ஐக்கிய முன்னணியினரின் (ஜே.வி.பி.) எழுச்சியால் ஏற்பட்ட குழப்பச் சூழலின் பின்னணியில் இலங்கையின் மார்க்சிய லெனினிய இயக்கமும் பிளவுபட்டன. பிற இடங்களிலும், 1970களிலும் 1980களிலும் மார்க்சிய லெனினியவாதிகள் அவற்றையொத்த பிரச்சினைகட்கு முகங் கொடுத் தனர். எனினும், ஒட்டுமொத்தமாக, மார்க்சிய லெனினிய இயக்கம், விதந்துரைக்கத்தக்க தனது மீள்வலிமையை வெளிக்காட்டி, நெருக்கடி யினூடு பிழைத்துத் தன்னை மீள நிலைநிறுத்தியது.

இந்திய மார்க்சிய லெனினியவாதிகள் உறுதியாக வளர்கிறார்கள். ஆனால் ஒரு வலிய புரட்சிகர சக்தியாக ஒன்றுபடுவதில் சிரமங்களை எதிர்நோக்குகிறார்கள். இலங்கையில் தமிழரிடையிலும் மலையகத் தமிழரிடையிலும் உள்ள செயலூக்கமுள்ள மார்க்சிய லெனினிய வாதிகள், யதார்த்தத்தில், ஒரே கட்சியால் அடையாளப்படுத்தப் படுகி றார்கள். எனினும், கடந்த மூன்று தசாப்த காலக் குறுகிய தேசியவாத அரசியல், முஸ்லிம்களிடையிலும் சிங்களவரிடையிலும் இடதுசாரி இயக்கத்தின் —நேர்மையான இடதுசாரி இயக்கத்தினது மட்டுமல்ல— வளர்ச்சிக்கு உதவவில்லை. சிங்களப் பேரினவாதத்தினதும் குறுகிய தமிழ்த் தேசியவாதத்தினதும் பகைமையின் பின்விளைவாக, முஸ்லிம்களிடையே வளர்ந்து வந்துள்ள குறுந் தேசியவாதம் ஒரு பெரிய அரசியற் காரணியாகும். சிங்களவரிடையே இருந்துவந்த ட்ரொட்ஸ்கிய மரபு —சிங்கள இளைஞர்களைத் தனது பேரினவாதச் செய்நிரலுக்கு அணிதிரட்டிய போலி இடதுசாரி ஜே.வி.பியிடம் இடது சாரிகள் தமது வலிமையை இழந்த பின்பும்— ஒரு பிளவுபடுத்தும் சக்தியாகத் தொடர்கிறது. எனினும் இன்னமும் தங்களை ஒரு அரசியற் கட்சியாக அமைத்துக்கொள்ள இயலாத சிங்கள மார்க்சிய லெனினியக் குழுக்களும் தனிமனிதர்களும் உள்ளனர். எனவே மார்க்சிய லெனினியவாதிகள் சந்தர்ப்பவாத அரசியலையும் சந்தர்ப்ப வாதக் கூட்டணிகளையும் விலக்கிய ஒரு பரந்துபட்ட முன்னணி பற்றி எண்ண வேண்டியுள்ளது.

மார்க்சிய லெனினியக் கட்சிகளையும் அமைப்புக்களையும் கொண்ட சர்வதேசக் கூட்டமைப்புக்களின் உருவாக்கத்துக்கான முயற்சிகள் வரையறைக்குட்பட்ட வெற்றியையே பெற்றுள்ளன. மார்க்சிய லெனினியக் கட்சிகளிடையே சகோதர உறவை விருத்தி செய்யும் தேவை அவசரமானது எனினும், அதை நிறைவேற்றத் தடையாகச் சில முரண்பாடுகள் உள்ளன. அவற்றைச் சரிவரக் கையாண்டால், அவை சினேக முரண்பாடுகளாகவே அமையும்.

தோற்றத்திற் கடுமையான தத்துவார்த்த முரண்பாடுகளை உடையனவாகத் தெரியும் மார்க்சிய லெனினியக் கட்சிகள் உட்பட்ட சகோதரக் கட்சிகளிடையே, கட்சிக்கும் கட்சிக்கும் இடையிலான மட்டத்தில், ஆரோக்கியமான உறவைக் கட்டியெழுப்ப வேண்டியுள்ளது. ஒரு நாட்டில் உள்ள மார்க்சிய லெனினியக் கட்சிகளிடையிலான உறவு பெருமளவும் புரட்சிகர வெகுஜன இயக்கத்தை முன்னெடுப்பதில் ஐக்கியமும் போராட்டமும் பற்றியதாக இருக்கும். வௌ;வேறு நாடு களில் —அல்லது, ஒரே நாட்டில், புவியமைப்போ இன, மொழி வேறு பாடுகளோ நெருக்கமான உறவாடலுக்கும் ஒத்துழைப்புக்கும் தடை யாக இருக்கக் கூடிய வௌ;வேறு பிரதேசங்களில்— உள்ள கட்சி களின் இடையிலான உறவு பெரும்பாலும் பரஸ்பர ஒத்துழைப்பும் கருத்துக்களதும் அனுபவங்களதும் பரிமாறல் என்பனவும் பற்றியதாக இருக்கும். சர்வதேசக் கம்யூனிஸ்ற் இயக்கத்தின் கடந்த கால அனுபவங்களது —சாதகமானவற்றினதும் பாதகமானவற்றினதும்— அடிப்படையில் நோக்குகையில், கட்சிகட்கிடையிலான உறவாடல் சகோதரத்துவமாயும் சமத்துவ அடிப்படையிலும் அமைவது முக்கியம்.

விரிவானதொரு அரவணைக்கும் அமைப்போ வலைப்பின்னலோ இல்லாத இன்றைய சூழ்நிலையில், அமைப்புக்களிடையிலான சகோதர உறவு, பரஸ்பர புரிந்துணர்வையும் ஆதரவையும் வேறுபாடுகளைச் சினேக முரண்பாடுகளாகக் கருதும் மனநிலையையும் வேண்டி நிற்கிறது. நிலைமைகள் நாட்டுக்கு நாடு, பிரதேசத்துக்குப் பிரதேசம் வேறுபடலாம் என்றும் —ஒரு நாடாயினும் பிரதேசமாயினும் பிரதேசத் திலுள்ள வௌ;வேறு சமூகங்களாயினும், சுருங்கக் கூறின் குறிப்பான எந்த நிலைமையிலும்— ஒவ்வொரு நிலைமைக்கும் உரிய புரட்சிகர மூலோபாயம் அதற்குத் தனித்துவமானது என்றும் அடையாளங் காண்பதை அது வேண்டி நிற்கிறது.

ஒரு சகோதரக் கட்சிக்கு இன்னொரு சகோதரக் கட்சியின் நாட்டிலோ பிரதேசத்திலோ உள்ள அரசியல் நிலைமைகளைப் பற்றிக் கருத்துரைக்கவோ, பொதுவான அல்லது அனைத்திற்கும் பொருந்து மாறான அவதானிப்புக்களைக் கூறவோ, நிகழக்கூடிய அபாயங் களையும் தவறுகளையும் பற்றி எச்சரிக்கவோ உள்ள உரிமையை யாரும் மறுக்க இயலாது. அத்தகைய உரிமையின்றிச் சகோதர உறவென்பது பொருளற்றதாகும். எனினும், கருத்துக்கள் பரிமாறப்படும் முறை முக்கியமானது. ஒரு மார்க்சிய லெனினியக் கட்சி —எவ்வளவு வலியதாயினும் வெற்றிகரமானதாயினும்— தன்னடக்கமாக நடப்பதுடன் கொள்கை, தந்திரோபாயம், மூலோபாயம் என்பன பற்றி இன்னொரு கட்சிக்கு ஆணையிடுவதைத் தவிர்க்க வேண்டும். அதே அளவுக்கு, ஒரு மார்க்சிய லெனினியக் கட்சி, ஒரு சகோதரக் கட்சியோ பிற நட்புச் சக்திகளோ கூறும் கருத்துக்களைக் கேட்க விருப்புடையதாக இருக்க வேண்டும். அனைத்துக் கட்சிகளும் ஒன்றிடமிருந்து இன் னொன்று கற்க விருப்புடன் இருக்க வேண்டும்.

தோற்றத்தில் ஒத்த, அடிப்படையில் வேறுபட்ட நிலைமைகளில் அனைத்திற்கும் பொதுவான தீர்வுகளை வற்புறுத்துவது தீங்கான தப்பபிப்பிராயங்கட்கு வழி செய்யும். அணுகுமுறைகளில் உள்ள வேறு பாடுகளை அவையவைக்கு உரிய நிலைமைகளின் சார்பாக அடையாளங் காண மறுப்பதும் வௌ;வேறான நிலைமைகளில் வௌ; வேறான மூலோபாயங்களின் தேவையை நிராகரிப்பதும் வரட்டுத் தனமாகும். மார்க்சிய லெனினியக் கட்சிகள் சகோதரக் கட்சிகட்குப் பாதகமானவற்றைச் சுட்டிநிற்கும் கூற்றுக்களைப் பற்றிக் கவனமாய் இருக்க வேண்டும். அதே அளவுக்கு, ஒரு தவறு நேருமிடத்து, அதற்கான எதிர்வினை, நெறிகளைப் பொறுத்துச் சமரசமில்லாமல் இருக்கும் அதே வேளை, பகைமையாக அமையலாகாது. சகோதரத் துவமாகத் தவறுகளைக் களையவும் வேறுபாடுகளைத் தீர்க்கவுமான அனைத்துச் சாத்தியப்பாடுகளும் ஒழியும் வரை, பொது விவாதங்கள் தவிர்க்க உகந்தவை.

அண்மைய சர்வதேச அனுபவங்கள்
அண்மைய நிகழ்வுகளில் மிக வருந்தத்தக்க ஒன்று, வெற்றிகரமாகப் 10 ஆண்டுக் கால ஆயுதப் போராட்டமொன்றை நடத்திய நேபாள (மாஓவாத) கம்யூனிஸ்ற் கட்சியும் —இப்போது ஐக்கிய நேபாள (மாஓவாத) கம்யூனிஸ்ற் கட்சி— இந்திய (மாஓவாத) கம்யூனிஸ்ற் கட்சியும் சம்பந்தப்பட்டதாகும். நேபாள மாஓவாதிகள், தங்களது பிரகடனப்படுத்தப்பட்ட இலக்கான நேபாள மக்கள் குடியரசை அமைதியான வழியில் வெய்றெடுப்போம் என்று சொன்னதற்கும் மேலாக, 21ம் நூற்றறாண்டின் சோஷலிசத்துக்கான வழியாகவும் அதைப் பரிந்துரைத்தனர். அத் தொடர்பிற் கூறப்பட்ட கருத்துக்கள், இந்தியாவின் பல பகுதி;களிலும் ஆயுதமேந்திய் போராட்டங்களைத் தொடர்ந்துவந்த இந்திய (மாஓவாத) கம்யூனிஸ்ற் கட்சிக்குப் பாதகமான சில நிலைகளைச் சுட்டி நின்றன. வியப்பிற்கு இடமின்றி, இந்திய மாஓவாதிகள் நேபாள மாஓவாதிகளைப் பின்பற்ற வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ற் கட்சி (மார்க்ஸிஸ்ட்) விஷமத்தனமாகக் கோரியது. அதன் பின்னணியில் இந்திய மாஓவாதிகள் நேபாள மாஓ வாதிகட்கு விடுத்த எதிர்வினை, தவறுகளைத் திருத்த உதவுவதற்கு மாறாக, இரு கட்சிகட்கும் இடையிவான உறவில் முறுகலை ஏற்படுத்தியது.

நேபாளப் புரட்சியின் சமாதானப் பாதை பற்றிய எந்த முடிவும் நேபாளப் பிற்போக்காளர்களதும் இந்திய மேலாதிக்கவாதிகளதும் அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகளதும் கைகளில் உள்ளதே ஒழிய நேபாள மாஓவாதிகளின் கையில் இல்லை என்பது ஐக்கிய நேபாள (மாஓவாத) கம்யூனிஸ்ற் கட்சியின் அண்மைய அனுபவங்கள் முலம் ஏற்கெனவே அறியப்பட்டுள்ளது. இந்தியாவும் அமெரிக்காவும் நேபாள மாஓவாதிகட்குப் பயங்கரவாதிகள் என முத்திரை குத்தி, நேபாளத்தின் முன்னைய அமைப்பை மீள நிலைநிறுவுவதற்கான ராணுவக் குறுக்கீட் டிற்கு அதனையே சாட்டாக்கக்கூடிய நிலையின் பின்னணியில் மாஓ வாதிகளின் பிரகடனப்படுத்தப்பட்ட நிலைப்பாட்டை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். எவ்வாறாயினும் அதனைப் பொதுமைப் படுத்து வதற்கோ பிற நாடுகட்கும் பரிந்துரைப்பதற்கோ போதிய அடிப்படை இல்லை. அது பற்றிய கருத்துப் பரிமாறல் ஊடகங்களை எட்டுவதைத் தவிர்த்து, நேபாள மாஓவாதிகள் தமது புதிய நிலைப்பாட்டை மீளாயப் போதிய அவகாசம் வழங்கித், தவறுகளை உரையாடல் மூலம் திருத்தியிருக்கலாம்.

எவ்வாறாயினும், உலகெங்கும் உள்ள இடதுசாரிகள் நேபாள மாஓவாதிகளிடமிருந்து கற்க வேண்டிய விடயங்கள் உள்ளன. அக முரண்பாடுகளைப் பொறுமையான, முழுமையான கலந்துரையாடல் மூலம் தீர்ப்பது அவற்றுள் ஒன்று. போராட்டப் பாதை பற்றிய கருத்து வேறுபாடுகள் கட்சிக்குள் பிளவுகளை ஏற்படுத்தும் என்று நேபாளப் புரட்சியின் எதிரிகள் குதூகலமாக ஊகங்களைத் தெரிவித்துக் கொண் டிருக்கையில், நேபாள மாஓவாதிகள் முரண்பாடுகளைத் தீர்த்துக் கொண்டதோடு மட்டுமல்லாது, கட்சியின் ஒற்றுமையையும் வலுப்படுத்தி அவர்களை வியப்புக்குட்படுத்தினர். மனத்தடையற்ற கலந்துரையாடல், விவாதம், விமர்சனமும் சுயவிமர்சனமும் என்பவற்றின் மூலமே மாஓ வாதிகள் அதனைச் சாதித்தனர்.

எனவே ஒரு நாட்டிற்குள் உள்ள மார்க்சிய லெனினியக் கட்சிகள் தமக்கிடையே பொது நிலைகள் கண்டு அதனை அரசுக்கு எதிரான வெகுஜனப் போராட்டங்களின் போதான ஒத்துழைப்பின் அடிப்படையாக ஆக்காதிருக்க நியாயமில்லை. அவ்வாறான ஒத்துழைப்பு, பிற நாடுகளின் மார்க்சிய லெனினியக் கட்சிகளைத் தேசிய மட்டத்திலும் சர்வதேச மட்டத்திலும் தம்முள் ஒத்துழைக்கத் தூண்டி நிற்கும்.

சோஷலிசத்துக்கான பாதை பற்றிய மார்க்சிய லெனினிய நிலைப் பாட்டுடன் உடன்படாத அரசியற் கொள்கைகளையுடைய ஏகாதிபத்திய விரோத, இடதுசாரி இயக்கங்களுடன் நடந்து கொள்ளும் முறை பற்றிய பிரச்சினையும் நம் முன் இருக்கிறது. இன்றைய நிலைமை களில், வெனெஸ{வேலாவை அதி முக்கியமான ஒரு விடயமாகக் கொள்ளலாம். ஏனெனிற், பல சீர்திருத்தவாதிகளும் விரக்திமிக்க ட்ரொட்ஸ்கியர்களும் மார்க்சிய லெனினியத்தை நிராகரிக்க அதனைப் பயன்படுத்துகின்றனர். வெனெஸ{வேலாவில் ஷவெஸின் குடிப் பொதுமை அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கு அமெரிக்காவும் வெனெஸ{ வேலாவின் பிற்போக்குவாதிகளும் எடுத்து வரும் தளராத முயற்சி களிடையே, அரசாங்கத்தை அதிகாரத்தில் வைத்திருப்பது எது என்று மார்க்சிய லெனினியர்கள் அறிவார்கள். பொய்ப் புகழ்ச்சிக்கார்கள் லத்தின் அமைரிக்க மக்களை மயக்கமான ஒரு சுயதிருப்தி மன நிலைக்குள் ஆழ்த்த முனைகின்றனர். குறிப்பாக உள்ளேயும் வெளியேயும் இருக்கும் எதிரிகள் வலியோர் என்பதால், அதைப் பற்றி மார்க்சிய லெனினியர்கள் எச்சரித்தும் உள்ளனர். வர்க்கம், வர்க்கப் போராட்டம் என்ற அடிப்படைகளில் லத்தின் அமெரிக்க வெகு ஜனங்களை அரசியல்மயப் படுத்தும்படி மார்க்சிய லெனினியர் கள் அழைக்கின்றனர். வெனெசுவேலாவில் இடதுசாரிகள் அமைய மாகிவருகிற் விதம் பற்றியும் அவர்கட்குத் தயக்கங்கள் உள்ளன.

அதினும் பெரிய பிரச்சினை, வெனெஸ{வேலாவின் அனுபவத்தை, 21ஆம் நூற்றாண்டுக்கான சோஷலிஸசம் என்ற பேரில், லத்தின் அமெரிக்கா முழுவதற்கும் —ஏன் முழு உலகுக்கும்— சிலர் விஸ்தரிப் பதைப் பற்றியது. எனினும், லத்தின் அமெரிக்காவின் இடதுசாரி, ஏகாதிபத்திய-விரோத அரசாங்கங்கள் அமெரிக்க ஏகாதிபத்தியத் தலைமையிலான சூழ்ச்சிகளினின்று தம்மைப் பாதுகாத்துக் கொள்ள அவற்றுக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்கும் தேவையை ஏற்பது அவசியமானது. லத்தின் அமெரிக்க இடதுசாரி அரசாங்கங்கள் எதிர்நோக்கும் இடர்வரவுகள் பற்றி மார்க்சிய லெனினியர்களும் பரந்துபட்ட இடதுசாரிகளும் அறிந்திருப்பதும் அவற்றைப் பற்றிக், குறிப்பாக உற்சாக மிகுதியின் அபாயங்கள் பற்றி, எச்சரிப்பதும் அதேயளவு முக்கியமானது. எனினும், நாட்டி னுள்ளும் சர்வதேச மட்டத்திலும் ஏகாதிபத்திய விரோத ஐக்கியத்தைப் பலவீனப்படுத்தும் விதமாக அந்த அரசாங்கங் களைக் கண்டனஞ் செய்வது பாரிய தவறாகும்.

முரண்பாடுகளைக் கையாள்வது பற்றிய பாடங்கள்
மேற்கண்டவாறு, மையமான பிரச்சினை, சகோதரக் கட்சிகளிடையிலும் நேச சக்திகளிடையிலும் விவாதங்களையும் கலந்துரையாடல்களையும் எவ்வாறு கையாள்வது எனபதாக ஒடுங்குகிறது. கட்சியொன்றிற்குள் முரண்பாடுகளைச் சரியாகக் கையாள்வது தொடர்பான விதிகள் பலவும் சகோதரக் கடசிகளிடையிலான முரண்பாடுகளைக் கையாள் வதற்கும் பொருந்துவன. சீனா முதலாளியப் பாதையை முன்னெ டுக்கும் வரையேனும், சீனக் கம்யூனிஸ்ற் கட்சி சகோதரக் கட்சிக ளுடன் முன்மாதிரியான முறையில் உறவு பேணியது. சீனக் கம்யூ னிஸ்ற் கட்சி சகோதரக் கட்சிகட்குக் கட்டளையிடவில்லை. சகோதரக் கட்சிகள் தமது அலுவல்களை எவ்வாறு நடத்த வேண்டும் என்று வலிந்து ஆலோசனை வழங்க முற்படவுமில்லை. ஆக மிஞ்சிச் சீனக் கம்யூனிஸ்ற் கட்சியிடமிருந்து எதிர்பார்க்கக் கூடியதெல்லாம், தனது அனுபவங்கள் பற்றிய ஒரு கூற்றும் குறிப்பிட்ட சூழ்நிலை பற்றிய அதன் மதிப்பீட்டை உணர்த்தக்கூடிய பொதுவான கருத்துரைகளுமே அல்லாது, என்றுமே பரிந்துரைகளல்ல.

புதிய-ஜனநாயகக் கட்சி நட்பான மார்க்சிய லெனினியக் கட்சிகளிட மிருந்தும் —தவறுகள் உட்பட்ட— தனது சொந்த அனுபவத்தினன்றும் கற்றுள்ளது. அதனால், சினேக முரண்பாடுகள் பகை முரண்பாடுகளாக மாறாது தவிர்க்க அதற்கு இயலுமாய் இருந்துள்ளது. உதாரணமாகப், புதிய-ஜனநாயகக் கட்சிக்கும் இந்தியாவிலுள்ள மார்க்சிய லெனினியக் கட்சிகள் பலவற்றுக்கும் இடையில் இலங்கையின் தேசிய இனப் பிரச்சினை பற்றிய கருத்து வேறுபாடுகள் இருந்துள்ளன. தேசிய இனப் பிரச்சினை, சுயநிர்ணயக் கோட்பாட்டின் அடிப்படையில், பல்வேறு தேசிய இனங்கட்குமான சுயாட்சிகளை நிறுவுவதன் மூலம், பிரிவினைக்கு இடமின்றித் தீர்க்கப்பட வேண்டும் என்பது புதிய-ஜனநாயகக் கட்சியின் நிலைப்பாடாகும். சிங்களப் பேரினவாதத்தைக் கண்டித்த புதிய-ஜனநாயகக் கட்சி, குறுகிய தமிழ்த் தேசிய வாதத்தையும் விடுதலைப் புலிகளின் ஜனநாயக விரோதத்தையும் வெகுஜன அரசியலைத் தாழ்த்துமளவுக்கு ஆயுதங்கள் மீதான அதீத நம்பிக்கையையும் விமர்சித்தது. இந்த அணுகுமுறை, இந்தியாவிலுள்ள மார்க்சிய லெனினியக் கட்சிகளிற் கணிசமானவற்றிடையே, இந்திய ஊடகங்களும் பக்கச்சார்பான பிற தகவல் ஊற்றுமூலங்களும் உருவாக்கிய பொதுவான தோற்றத்தின் அடிப்படையில், வடிவம் பெற்றிருந்த பார்வைகளுடன் முரண்பட்டது.

புதிய-ஜனநாயகக் கட்சி, தான் தவறாகக் கருதிய நிலைப்பாடு களைக் கொண்டிருந்ததற்காக இந்திய மார்க்சிய லெனினியக் கட்சிகளைக் குறை கூறவில்லை. மாறாகத், தன்னுடன் தொடர்பு பூண்டிருந்த ஒவ்வொரு கட்சியிடமும் தனது நிலைப்பாட்டைப் பொறுமையாக விளக்கியது. சில கட்சிகள் புதிய-ஜனநாயகக் கட்சியின் வெளியீடுகளைப் பெற்று அதன் நிலைப்பாட்டை விளங்கிக்கொள்ள முயன்றன. வேறு சில இன்னமும் கருத்து முரண்படுகின்றன. இலங்கையின் பிரதான முரண்பாடு தேசிய இனப் பிரச்சினையே என்று புதிய-ஜனநாயகக் கட்சி கருதுகிற போதும், அது பற்றிய கருத்து வேறுபாடுகள் கட்சிகட்கிடையே பாரிய முரண்பாடாகாதிருப்பதையே வேண்டுகிறது.

அவ்வாறே, புதிய-ஜனநாயகக் கட்சிக்கு இந்திய நிலைமைகள் பற்றிய தனது சொந்த மதிப்பீடு உண்டு. அடக்குமுறை அரசுக்கு எதிரான அனைத்து வெகுஜனப் போராட்டங்களையும் அது ஆதரிக்கிறது. இந்தியாவிலுள்ள அனைத்து மார்க்சிய லெனினியக் கட்சிகளுடனும் குழுக்களுடனும் அது நட்புறவை நாடுகிறது. இந்திய அரசியல் நிலைமைகள் பற்றியும் சகோதரக் கட்சிகளின் அரசியற் பாதைகளையும் போராட்ட முறைகளையும் பற்றி அது தனது சொந்த மதிப்பீடுகளைக் கொண்டுள்ளது. வாய்ப்புக் கிடைக்கும் போது சம்பந்தப்பட்ட கட்சியுடனோ குழுவுடனோ அது தனது பார்வைகளைப் பகிருகிறது. கருத்துப் பரிமாறல் மூலம் அது தனது புரிதலை மேலுந் தெளிவாக்கித் தவறான மதிப்பீடுகளைத் திருத்திக் கொள்கிறது. நெறி சார்ந்த அடிப்படையில், மார்க்சிய லெனினியக் கட்சிகளிடையிலும் குழுக்களிடையிலும் ஏற்படும் பிணக்குக்களில் பகிரங்கமான நிலைப்பா டெதையும் அது மேற்கொள்வதில்லை. அதே வேளை, அதன் கருத்தைத் தெரிவிக்க வேண்டப்பட்ட வேளைகளில், அது தனது கருத்தை ஒளிவுமறைவின்றி நட்பான முறையிற் கூறியுள்ளது.

இன்னொரு மார்க்சிய லெனினிய அமைப்பின் நிகழ்ச்சியொன்றில் புதிய-ஜனநாயகக் கட்சிப் பேராளர் ஒருவர் பங்குபற்றுவது தமக்குப் பகைமையான செயல் எனும் விதமாகச் சில அமைப்புக்கள் சினங் கொள்வது துர்ப்பாக்கியமானது. உண்மை நிலை ஏதெனின், ஒத்ழைப்பும் உதவியும் பரஸ்பர அடிப்படையில் அமையுமாறும், சகோதரக் கட்சிகளிடையே பாகுபாடு இல்லாதவாறும், ஒருவருக்கு மாறாக மற்றொருவர் தரப்பில் நிற்காதவாறும் புதிய-ஜனநாயகக் கட்சி சகோதரக் கட்சிகள் அனைத்துடனுமான தன் உறவைத், தேசிய மட்டத்திலும் சர்வதேச மட்டத்திலும், சமமான அடிப்படையிலேயே பேணுகிறது. இதுவும் 1960களிலும் 1970களிலும் மார்க்சிய லெனினியக் கட்சிகள் பிற நாடுகளின் போட்டியிடும் மார்க்சிய லெனினியக் கட்சிகள் பாற் கொண்டிருந்த நோக்கை ஒத்தது. இந்த நோக்கு, பக்கஞ் சாராமல், போட்டியிடும் கட்சிகள் தம்மிடையிலான வேறுபாடு களைச் சுமுகமாகத் தீர்த்து நெருக்கமான உறவு பூணுவதை ஊக்குவிப்பதாகும்.

ஆரோக்கியமான மார்க்சிய லெனினிய அணுகுமுறையின் தேவை

இறுதி ஆராய்வில், மார்க்சிய லெனினியர்கள் அனைவரும் தேசிய மட்டத்திலும் சர்வதேச மட்டத்திலும் ஒருவருக்கொருவர் நெருக்கமாக வேண்டியோராவர். மார்க்சிய லெனினியப் போராட்டப் பாதை என்பது வெகுஜனப் போராட்டத்தையும் பரந்துபட்ட முன்னணி அமைப்புக் களையும் அடிப்படையாகக் கொண்டது என்பதை நாம் மனதிற் கொண்டிருக்க வேண்டும். அதன் பொருள், அடிப்படை நெறிகளில் விட்டுக்கொடுப்பின்றி, ஒரு பொதுவான ஒரு வேலைத் திட்டத்தின் அடிப்படையிலான அதி பரந்துபட்ட ஒற்றுமையை இயலுமாக்குவது. பரந்துபட்ட ஒற்றுமைக்கும் நெறிகளில்; உறுதிக்கும் இடையில் சரியான தொரு சமநிலை முக்கியமானது. இலக்குக்கள் தெளிவாக வரை யறுக்கப்பட்டு இரகசியத் திட்டம் எதுவும் இல்லாதளவில், நெறிகளில்; உறுதியையும் மாற்றுக் கருத்துக் கொண்டோருடன் ஒத்துழைப்பையும் இசைவுடன் முன்னெடுக்க முடியும். அவ்வாறு தான் உலகெங்குமுள்ள மார்க்சிய லெனினியர்கள் கொலனி ஆட்சிக்கும் ஃபாசிசத்துக்கும் ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புக்கும் பலவாறான உள்நாட்டு ஒடுக்கு முறைகட்கும் எதிரான போராட்டங்கட்கு வெற்றிகரமாகத் தலைமை தாங்கினர்.

தேசிய மட்டத்திலும் சர்வதேச மட்டத்திலும், வலுவான மார்க்சிய லெனினியப் புரட்சிகர இயக்கங்களைக் கட்டியெழுப்பும் நோக்குடன் சகோதரக் கட்சிகளிடையே பரஸ்பர ஆதரவையும் ஒத்துழைப்பையும் வலுப்படு;த்த, மேற்கூறிய அணுகுமுறையைச் சகோதரக் கட்சிகளி டையிலான உறவுக்கு விஸ்தரிப்பது மட்டுமே தேவைப்படுகிறது.

ஒரு கட்சியின் கொள்கைகளும் நடைமுறைகளும் இன்னொன்றின் கொள்கைகளுடனும் நடைமுறைகளுடனும் முரண்படுவது போலத் தோன்றுமிடத்துச், சகோதரக் கட்சிகளிடையே முரண்பாடுகள் எழலாம். இத்தகைய முரண்பாடுகள் தீர்க்கக் கடினமானவையோ இயலாத வையோ அல்ல. தோற்றத்தில் ஏற்க இயலாதனவாகத் தெரியும் முடிவுகள் எடுக்கப்பட்ட சூழ்நிலைகளை ஆராய்வதும் அணுகுமுறை வேறுபாடுகட்கான காரணங்களை விளங்கிக் கொள்வதும் முக்கிய மானது. எந்த முடிவையும் விளங்கிக் கொள்வது அதனை அங்கீ கரிப்பதல்ல. மாறாக அம் முடிவுக்கு இட்டுச்சென்ற நிலைமைகளை அடையாளங் காண்பதேயாகும். விமர்சனக் கருத்துக்களை உரைக் கவோ மாற்று வழிகளை முன்வைக்கவோ முன்பு, மேற்கூறிய நடவடிக்கைகளை முழுமையாக நடைமுறைப் படுத்த வேண்டும்.

நிலைமைகள் வேறுபடுவன என்பதையும், நாட்டுக்கு நாடு மட்டு மன்றி, ஒரு நாட்டினுள் பிரதேசத்துக்குப் பிரதேசம், சமூகத்துக்குச் சமூகம் வேறுபடும் குறிப்பான சூழ்நிலைகட்கும் பிரச்சினைகட்கும் புரட்சி முகங்கொடுக்க வேண்டும் என்பதையும் நினைவிலிருத்துவது முக்கியமானது. அதன் பொருள், சர்வவியாபகமான விதிகளையோ வர்க்கத்தினதும் வர்க்கப் போராட்டத்தினதும் முதன்மையையோ மறுப்ப தல்ல. அது, பிரச்சினையை வகைமாதிரியான தீர்வொன்றுக்கு அமைய வரையறுப்பதற்கு மாறாகக், குறிப்பிட்ட ஒரு பிரச்சினையில் மார்க்சிய லெனினியத்தின் விஞ்ஞான முறையை பிரயோகிப்பதற்கான அழைப்பே யாகும்.

மார்க்சிய லெனினியர்கள் எப்போதுமே நினைவிற் கொள்ள வேண்டியது ஏதெனில், எல்லாச் சகோதரக் கட்சிகளும் சமமானவை என்பதுடன், கட்சிக்கும் கட்சிக்குமிடையிலான உறவு சகோதரக் கட்சிகளை ஐக்கியப் படுத்தும் விடயங்கட்கு அழுத்தங் கொடுக்க வேண்டுமேயன்றி, அவற்றைப் பிரிக்கும் விடயங்கட்கு அல்ல. ஏகாதிபத்தியத்திற்கும் அதன் ஏவலாட்களுக்கும் எதிரான வெகுஜன விடுதலைப் போராட்டங்கள் சார்ந்த பல்வகைப்பட்ட பிரச்சினைகளில் சகோதரக் கட்சிகளிடையே கருத்தொருமைப்பாடு; தேவை. அத்தகைய கருத்தொருமைப்பாடு, விறைப்பானதாயன்றி, நெறிகளில்; உறுதியையும் வேறுபாடுகளைக் கையாள்வதில் நெகிழ்வான தன்மையையும் கொண்டு, வளைந்துகொடுக்கக் கூடிய அணுகுமுறையை வேண்டி நிற்கிறது.

நவீன தகவல் தொழில் நுட்பம், —துரிதமான தகவற் பரிமாற்றமும் ஒப்பிடுகையில் எளிதாகத் தொடர்புகளை ஏற்படுத்தக் கூடியமையும் உட்பட்ட— பல வழிகளில் புரட்சிகரப் போராட்டங்கட்கு உதவி யுள்ளது. அதே வேளை, அது, தனிமனிதரிடையிலும் அமைப்புக்க ளிடையிலும் அவசரத்தனமான கவனப்பிசகான கருத்துப் பரிமாறல்களை ஊக்குவிப்பதுடன் விவாதத்துக்குரிய விடயங்கள் விளங்கிக்கொள்ளப் படுவதற்கு முன்னமே விவாதங்களைப் பொதுப் பார்வைக்குக் கொண்டுவந்து விடுகிறது. மார்க்சிய லெனினிய அமைப்புக்களும் அவற்றைச் சார்ந்த தனிமனிதர்களும் நடத்தும் “டிடழபளவைநள” எனப்படுவனவும் அவற்றையொத்த இணையத்தளங் களும் பொதுப் பார்வைக்குட்படக் கூடிய தகவல்களைக் கையாள் வதிற் கவனமும் கட்டுப்பாடும் கொண்டிருக்க வேண்டும்.

இப்போது, அரசியற் கருத்து மோதல்களிற் பங்குபற்றுவோர், எதிராளியோ அவர் சார்ந்த அமைப்போ குறிப்பிட்ட ஒரு விடயம் பறு;றிப் பேசுவதற்கு முன் தம்மைச் ‘சுயவிமர்சனம்’ செய்துகொள்ள வேண்டும் என்கிற விதமாகச், சுயவிமர்சனம் என்ற சொல்லை வெகு மலிவாகப் பயன்படுத்துகின்றனர். இத்தகைய நடத்தை சிறுபிள்ளைத் தனமானதும் மார்க்சிய லெனினியர்கள் சுயவிமர்சனம் எனக் கூறும் போது மனதிற்கொண்டுள்ள பொருளை மறுதலிப்பதுமாகும். பொதுப் பார்வைக்கு உட்படுமாறு, தனிப்பட்ட அல்லது தனிமனிதத் தன்மைப் பட்ட விவாதங்களில் ஈடுபடுவது, நிச்சயமாக ஒரு மார்க்சிய லெனினி யருக்கு ஒவ்வாத சிறுபிள்ளைத்தனமான சிறுமுதலாளிய நடத்தைக்கு இட்டுச் செல்லலாம். மார்க்சிய லெனினியர்கள் இவ்வாறு பகிரங்கமான தனிப்பட்ட தாக்குதல்களில் இறங்குவதால் எதிரிகளும் விஷமிகளுமே பயனடைவர் என்பதை மறக்கலாகாது.

விமர்சனமும் சுயவிமர்சனமும் தவறுகளைத் திருத்துவதற்கான மார்க்சிய லெனினிய வழிமுறையின் மையமாக அம்சமாகும். அதன் முலம் ஒரு அமைப்பு தவறான பார்வைகளையும் செயல்களையும் திருத்த முயவுகிறதே ஒழியத், தவறான கருத்துடையவரையோ தவறு செய்தவரையோ அவமானப்படுத்த முயலவில்லை. இங்கு தேவை யானது தனி மனிதர்களிடையிலும் அமைப்புக்களிடையிலும் ஆதரவும் ஐக்கியமுமாகும்.

இலங்கையின் மார்க்சிய லெனினியர்கள் பிற தென்னாசிய மார்க்சிய லெனினியர்கள் போன்று இந்தியாவின் வெகுஜனப் புரட்சிகரப் போராட்டங்களால் ஊக்குவிக்கப்படுகின்றனர். இந்தியப் புரட்சி சிறிய அண்டை நாடுகளின் புரட்சிப் பணியை அந்தளவுக்கு இலகுவாக்கும். நேபாளத்திற் போன்று, ஒரு புரட்சி வேகம் பெறுகையில், அதற்குக் குழிபறித்து நாட்டின் உறுதியைக் குலைக்கும் நோக்கில் இந்தியா குறுக்கிடுவதை இந்தியப் புரட்சிகரச் சக்திகள் மறிக்கலாம். இந்திய மார்க்சிய லெனினியர்கட்கு எமது வேண்டுகோள் ஏதெனின், அவர்கள் தம்மிடையிலான வேறுபாடுகளைக் கடந்து இப் பிரதேசத்தின் மார்க்சிய லெனினிய, ஏகாதிபத்திய விரோத இயக்கங்களுடன் உறவுகளைக் கடடிnழுப்பி வலுப்படுத்தி ஏகாதிபத்திய விரோத, மேலாதிக்க விரோதப் பொதுநோக்குடன் தொடர்புடைய விடயங்களில் பரஸ்பர ஆதரவை ஊக்குவிக்க வேண்டும்.

(இக் கட்டுரை New Democracy, 2010 February இதழில் வெளிவந்த ஆங்கிலக் கட்டுரையின் தமிழாக்கமாகும்).

Leave a Reply