இராகலை பன்னீர்
செம்படை….
உயருது உயருது மேலே
செங்கொடி உயருது
உயருது உயருது உயரே!
சிவப்பாய்
ஓடுது ஓடுது குருதி
விரைவாய்
விடியுது விடியுது கிழக்கே (செம்படை)
மாவலிக் கரையில்
வெள்ளம் புரள்வதாய்
மலையக மானுடம்
முகிழ்த்து எழுந்தது! (செம்படை)
ஏய்த்த தலைகளை
எட்டி உதைத்து
எதிர்த்துச் செல்லுது
எதிரியை நோக்கி (செம்படை)
சீற்றம் மிகுந்த
சிங்கங்களாகி
நகங்களை விரித்து
நகர்ந்து போகுது! (செம்படை)
நூற்றியெழுபது
வருங்களாக
அடக்கி வைத்தவர்
கைகளை நொறுக்கும் (செம்படை)
நெஞ்சக் குமுறலை
நெருப்பாய் மாற்றி
அஞ்சிய வாழ்வின்
அவலம் போக்கும் (செம்படை)
(நன்றி: புதிய தலைமுறை – இராகலை பன்னீர்,
தேசிய கலை இலக்கியப் பேரவை 1999)