முருகையன்
வீடு முற்றும் இருட்டு மண்டிக் கிடக்கும் வேளை
விஷப் பூச்சி புழுக்களுடன் சிலந்தி பாம்பும்
ஓடியங்கு விளையாடித் திரிதல் கூடும்.
ஓளி கிடைத்தால் அவற்றையெல்லாம் ஒழித்தல் கூடும்.
நாடு முற்றும் இருட்டு மண்டிக் கிடக்குமானால்
ஞாயசபை நு}றிருந்தும் நன்மை உண்டோ?
கேடுகெட்ட அறியாமை இருள் நீங்காமல்
கிடைக்குமோ மருந்துக்கும் நீதி ஏதும்?
கண்ணாடி புகைமூடிக் கறுத்திருந்தால்
கட்டாயம் விளக்கின் ஒளி மங்கும் தானே!
சுண்ணாம்பு பூசி அதைத் துடைக்க வேண்டும்
சுத்தமாய் துப்புரவாய் – வெளிச்சம் கூடும்.
தண்ணீரிற் படர்ந்திருக்கும் பாசி நீக்கிச்
சரிசெய்தால் அல்லவோ து}ய்மை தோன்றும்.
கல்லாமை என்கின்ற புகையை ஊதக்
கனல் வீசி ஒளி பிறக்கும். கல்வி மூளும்.
கல்வியினை மூட்டுகிற உபாத்தியாயர்
கட்டாயம் அறிஞராய் இருக்க வேண்டும்.
பல்லுடைக்கும் பழம் பாட்டின் கருத்துச் சொல்லப்
பழகிவைத்த படிப்பு மட்டம் போதாதன்றோ!
புல்லு நுனி பூப்போல மொட்டவிழ்க்கும்
புதுப்பாட்டடின் அருமைகளும் அறிதல் வேண்டும்
வில்லெறியும் அம்பைப் போல் இலக்கைத் தாக்கும்
விசையான சொல்லாற்றல் மிகவும் வேண்டும்
கணக்கறிந்து தொழில் நுட்பம் அறிந்து
சொந்தக் கைவினையின் திறனடைந்து
கலங்கி நிற்கும் உணர்ச்சிகளைத் தெளிவித்து
வாய்க்கால் கட்டி ஓடவைக்கும் விஞ்ஞானத்தை
பிணக்குகளுக்காக அன்றி அமைதிக்காகப்
பேணுமொரு மனப்பான்மைப் பேறடைந்து
மணக்கின்ற கலைச் சுவைகள் வளர வைக்கும்
வாய்ப்புடைய அறிஞர்களே உபாத்தியாயர்.
கிளிப்பிள்ளைப் பாடத்தால் நன்மை என்ன?
கேள்விகளைச் சரியாகக் கேட்டால் தானே
துளிப் பிiழையும் இல்லாத விடை கிடைக்கும்
து}ண்டினால் அல்லவோ துலக்கம் தோன்றும்.
வழிப்படுத்தத் தெரிந்தவர் தான் உபாத்தியாயர்.
மாணவர்கள் அந்த வழி நடக்க வேண்டும்.
விளக்குப்போல் ஆசிரியர் இருப்பாரானால்
விளக்குகளாய் மாணவரும் ஒளி விடாரோ?
1981
(நன்றி: “நாங்கள் மனிதர்”
தேசிய கலை இலக்கியப் பேரவை & சவுத் ஏசியன் புக்ஸ், 1992)