Archive for the ‘கவிதை’ Category

உலை

Thursday, July 8th, 2010

ஜோஸெ மரியா ஸிஸொன்*

மார்கழியில் என் சிறைக்கூண்டை
நள்ளிரவில் ஒரு உறைகுளிர் அறையோடும்
பகலில் ஒரு வெதுப்பகத்துடனும்
ஒப்பிடுவேன்.

இப்போது வெய்யிற்காலம் என்பதால்
இதை நரகத்தோடு ஒப்பிடுகிறேன்.
எனினும் இதன் சிறிய அளவு கருதி
இதை ஒரு உலையோடு ஒப்பிடுகிறேன்.

இது ஒரு சீறும் உலை:
எஃகைப் பதனிடுகிறது.
இது ஆறுதல் தரும் ஒரு உவமேயம்.

[*ஜோஸெ மரியா ஸிஸொன் பிலிப்பின்ஸ் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராகவும் முக்கியமான கொள்கை வகுப்பாளருமாக இருந்து, பல ஆண்டுகளாக நாடுமீள இயலாத நிலையில், ஒல்லாந்தில் பிலிப்பின்ஸ் தேசிய ஜனநாயக முன்னணியின் ஆலோசகராகச் செயற்படுகிறார்.]

(நன்றி: மறப்பதற்கு அழைப்பு
தேசிய கலை இலக்கியப் பேரவை 1999)

செவ்வானம் சிவக்கச் செம்படை எழும்

Thursday, July 8th, 2010

இராகலை பன்னீர்


செம்படை….
உயருது உயருது மேலே
செங்கொடி உயருது
உயருது உயருது உயரே!

சிவப்பாய்
ஓடுது ஓடுது குருதி
விரைவாய்
விடியுது விடியுது கிழக்கே      (செம்படை)
மாவலிக் கரையில்
வெள்ளம் புரள்வதாய்
மலையக மானுடம்
முகிழ்த்து எழுந்தது!                   (செம்படை)
ஏய்த்த தலைகளை
எட்டி உதைத்து
எதிர்த்துச் செல்லுது
எதிரியை நோக்கி                         (செம்படை)
சீற்றம் மிகுந்த
சிங்கங்களாகி
நகங்களை விரித்து
நகர்ந்து போகுது!                         (செம்படை)
நூற்றியெழுபது
வருங்களாக
அடக்கி வைத்தவர்
கைகளை நொறுக்கும்            (செம்படை)
நெஞ்சக் குமுறலை
நெருப்பாய் மாற்றி
அஞ்சிய வாழ்வின்
அவலம் போக்கும்                   (செம்படை)

(நன்றி: புதிய தலைமுறை – இராகலை பன்னீர்,
தேசிய கலை இலக்கியப் பேரவை 1999)

மறப்பதற்கு அழைப்பு

Saturday, April 3rd, 2010

எரிஷ் ஃப்றீட்
(புலம்பெயர்ந்த ஒஸ்ற்றியர்)

[“அவர்கள் மட்டும் தமது கோரிக்கைகளை இறுதியாக மறப்பபார்களெனின்”
- ஸியோனிஸ்ற்றுக்களின் வாதம்]

“மடக்கதை கதையாதே”
…. என்கிறது காற்று.
“உலகம் சுழல்கிறது
எல்லாம் மாறுகிறது
முடிந்ததை நீ மறந்தே தீரவேண்டும்”.

“நீ உன் வயலை மறக்கமுடியுமெனின்”
…. என்கிறது நஞ்சூட்டப்பட்ட பயிர்.
“நீ உன் வெள்ளை வீட்டை மறக்கமுடியுமெனின்”
…. என்கிறது இடிந்த கல்.
“பழுப்பு நிறக் குடத்தை நீ மறக்கமுடியுமெனின்”
…. என்கின்றன ஓட்டுத் துண்டுகள்.
“ஒலிவ் மரத்தை மறக்கமுடியுமெனின்”
…. என்கிறது மரக்குற்றி.
“தோடை மரங்களை”
…. என்கிறது எரிந்த தோப்பு.

“நீ உன் சகோதரியர் இருவரையும் மறக்கமுடியுமெனின்”
…. என்கிறது புதைகுழிக்குச் செல்லும் பாதை.
“ஓலங்களை நீ மறக்கமுடியுமெனின்”
…. என்றன செவிகள்.

“அப்போது
அபாயத்துடன் விளையாடுவதை நீ நிறுத்தலாம்”

“பிடுங்கப்பட்ட மரத்தினின்று விடுதலை பெற்ற
அத்திக் கனி போலக்
கப்பலின் வயிற்றினுள் நீ கடற் பயணம் போகலாம்.
காற்றில் மணற்துகள் போல விடுதலையைக் காணலாம்.
முடிவில்
நீ இழந்த சொந்த மண்ணினின்று விமோசனம் பெறலாம்”.

“உலகம் சுழல்கிறது
முடிந்ததை நீ மறந்தே தீரவேண்டும்.
மடக்கதை கதையாதே”
என்கிறது காற்று—
உன்னைத் துரத்தினோரின் தரப்பினின்று வீசியவாறு.

சமாதானம்

Saturday, April 3rd, 2010

சுபத்திரன்
(1935-1979)

ஓ! அமெரிக்க ஏகாதிபத்தியத்தின்
போர்ச் சுறாக்களே!
இந்து சமுத்திரத்தின் அலைகளில் உலாவும்
நெத்தலி மீன்கள்
உமது போரொத்திகை கண்டு
திகிலடைந்து    ஒளித்து விடவில்லை
அவை உமது கொடுமையை எதிர்த்துத்
திமிங்கிலங்களாக வளருகின்றன.

இந்து சமுத்திரத்தின் சமாதானத் தோணிகள்
உனது போர்க்கப்பலை முழ்கடிக்கும்
ஐ.நா.வின் பேச்சு மேடையில்
சமாதானம் நம்பிக்கை வைக்கவில்லை
உன் அழிவுக் காலப் போர்முனையில்
சமாதானம் நம்பிக்கை வைத்துள்ளது

(1970களில் எழுதப்பட்டது)
(நன்றி: சுபத்திரன் கவிதைகள், பூவரசுகள், கல்லடி, மட்டக்களப்பு, 1997)

ஒளி

Saturday, April 3rd, 2010

சுபத்திரன்
(1935-1979)

மக்களிலும் பெரிதாக ஆயுதத்தை
மகத்தானதென எண்ணித் திரியுங் கூட்டம்
எக் கொடியைச் சுமந்தாலும் மக்களுக்கு
ஏற்ற பணி செய்கின்ற தகுதியற்ற
விக்கினமே செய்யுமென ஈழ மண்ணில்
விரிவாகப் பல பாடங் கற்றுவிட்டோம்
திக்கறியாத் திசையறியாத் திரிவோமல்லோம்
திசை காட்டும் ஆதவனின் ஒளியைக் கண்டோம்

ஆயுதத்தை மலையளவு குவித்தாலென்ன?
அதைச் சுமக்கும் “ஆள்”; தேடிக் காடும்மேடும்
மேய்ந்தலைந்து நடுநிசியிற் திரிந்தாலென்ன?
மக்களவர் தங்களது அடிமை வாழ்வின்
நோய்க்கேற்ற மருந்தான தத்துவத்தை
நெஞ்சத்தாற் செயலாக்கி உண்ணாவிட்டால்
ஆயுதத்தால் என்ன பயன்? அதனைத் தூக்கும்
ஆட்பலத்தால் என்ன பயன் அடைதல் கூடும்?

(1971 ஏப்ரல் கிளர்ச்சிக்குப் பின்னர் எழுதப்பட்டது)
(நன்றி: சுபத்திரன் கவிதைகள், பூவரசுகள், கல்லடி, மட்டக்களப்பு, 1997)

Thursday, July 8th, 2010

உலை

ஜோஸெ மரியா ஸிஸொன்*

மார்கழியில் என் சிறைக்கூண்டை
நள்ளிரவில் ஒரு உறைகுளிர் அறையோடும்
பகலில் ஒரு வெதுப்பகத்துடனும்
ஒப்பிடுவேன்.

இப்போது வெய்யிற்காலம் என்பதால்
இதை நரகத்தோடு ஒப்பிடுகிறேன்.
எனினும் இதன் சிறிய அளவு கருதி
இதை ஒரு உலையோடு ஒப்பிடுகிறேன்.

இது ஒரு சீறும் உலை:
எஃகைப் பதனிடுகிறது.
இது ஆறுதல் தரும் ஒரு உவமேயம்.

[*ஜோஸெ மரியா ஸிஸொன் பிலிப்பின்ஸ் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராகவும் முக்கியமான கொள்கை வகுப்பாளருமாக இருந்து, பல ஆண்டுகளாக நாடுமீள இயலாத நிலையில், ஒல்லாந்தில் பிலிப்பின்ஸ் தேசிய ஜனநாயக முன்னணியின் ஆலோசகராகச் செயற்படுகிறார்.]

(நன்றி: மறப்பதற்கு அழைப்பு
தேசிய கலை இலக்கியப் பேரவை 1999)

நீதி வழங்கப்படுகிறது

Tuesday, January 26th, 2010

ஓமர் பா
(Omar Ba, Mauritania)

உதைக்கப்பட்டுப்
பொருட்கள் களவாடப்பட்டு
மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டாய்?
அப்படியாயின் சாட்சிகள்?

மண்ணின் துணிக்கைகள் எத்தனையோ
அத்தனை.
காடியெல் ஒருவன்
ந்டுல்லா
ந்டியாம்nடீலே ஒருவன்
பறவைகள் கூடச் சாட்சி சொல்லும்….

என்றாலும்
குடித் தலைவன்
நீதவானாகத் தன் மகனையும்
மொழி பெயர்ப்பாளனாக மருமகனையும்
வைத்திருப்பதை மறந்து விட்டாய்

(நன்றி: “பணிதல் மறந்தவர்”
தேசிய கலை இலக்கியப் பேரவை & சவுத் ஏசியன் புக்ஸ், 1993)

வெளிச்சம்

Tuesday, January 26th, 2010

முருகையன்

வீடு முற்றும் இருட்டு மண்டிக் கிடக்கும் வேளை
விஷப் பூச்சி புழுக்களுடன் சிலந்தி பாம்பும்
ஓடியங்கு விளையாடித் திரிதல் கூடும்.
ஓளி கிடைத்தால் அவற்றையெல்லாம் ஒழித்தல் கூடும்.

நாடு முற்றும் இருட்டு மண்டிக் கிடக்குமானால்
ஞாயசபை நு}றிருந்தும் நன்மை உண்டோ?
கேடுகெட்ட அறியாமை இருள் நீங்காமல்
கிடைக்குமோ மருந்துக்கும் நீதி ஏதும்?

கண்ணாடி புகைமூடிக் கறுத்திருந்தால்
கட்டாயம் விளக்கின் ஒளி மங்கும் தானே!
சுண்ணாம்பு பூசி அதைத் துடைக்க வேண்டும்
சுத்தமாய் துப்புரவாய் – வெளிச்சம் கூடும்.

தண்ணீரிற் படர்ந்திருக்கும் பாசி நீக்கிச்
சரிசெய்தால் அல்லவோ து}ய்மை தோன்றும்.
கல்லாமை என்கின்ற புகையை ஊதக்
கனல் வீசி ஒளி பிறக்கும். கல்வி மூளும்.

கல்வியினை மூட்டுகிற உபாத்தியாயர்
கட்டாயம் அறிஞராய் இருக்க வேண்டும்.
பல்லுடைக்கும் பழம் பாட்டின் கருத்துச் சொல்லப்
பழகிவைத்த படிப்பு மட்டம் போதாதன்றோ!

புல்லு நுனி பூப்போல மொட்டவிழ்க்கும்
புதுப்பாட்டடின் அருமைகளும் அறிதல் வேண்டும்
வில்லெறியும் அம்பைப் போல் இலக்கைத் தாக்கும்
விசையான சொல்லாற்றல் மிகவும் வேண்டும்

கணக்கறிந்து தொழில் நுட்பம் அறிந்து
சொந்தக் கைவினையின் திறனடைந்து
கலங்கி நிற்கும் உணர்ச்சிகளைத் தெளிவித்து
வாய்க்கால் கட்டி ஓடவைக்கும் விஞ்ஞானத்தை
பிணக்குகளுக்காக அன்றி அமைதிக்காகப்
பேணுமொரு மனப்பான்மைப் பேறடைந்து
மணக்கின்ற கலைச் சுவைகள் வளர வைக்கும்
வாய்ப்புடைய அறிஞர்களே உபாத்தியாயர்.

கிளிப்பிள்ளைப் பாடத்தால் நன்மை என்ன?
கேள்விகளைச் சரியாகக் கேட்டால் தானே
துளிப் பிiழையும் இல்லாத விடை கிடைக்கும்
து}ண்டினால் அல்லவோ துலக்கம் தோன்றும்.

வழிப்படுத்தத் தெரிந்தவர் தான் உபாத்தியாயர்.
மாணவர்கள் அந்த வழி நடக்க வேண்டும்.
விளக்குப்போல் ஆசிரியர் இருப்பாரானால்
விளக்குகளாய் மாணவரும் ஒளி விடாரோ?

1981
(நன்றி: “நாங்கள் மனிதர்”
தேசிய கலை இலக்கியப் பேரவை & சவுத் ஏசியன் புக்ஸ், 1992)

இஸ்ரேல் யூதன் ஒருவனுக்கும் அராபியன் ஒருவனுக்குமிடையே உரையாடல்

Wednesday, January 27th, 2010

சமீஹ் அல் காசிம்

 

என் பாட்டன் பாட்டியர் அவுஷ்விற்சில் எரிக்கப்பட்டனர்

என் இதயம் அவர்களுடன் உள்ளது. ஆனால் என் உடலிலிருந்து சங்கிலியை நீக்கிவிடு

உன் கைகளில் என்ன?

ஒரு பிடி விதை

சினம் உன் முகத்தைச் சிவக்க வைக்கிறது

அது தான் நிலத்தின் நிறம்

உன் வாளை உருக்கிக் கலப்பையாய் மாற்று

காணி எதுவும் நீ விட்டுவைக்கவில்லை

நீ ஒரு குற்றவாளி

நான்  எவரையும் கொல்லவில்லை எவரையும் ஒடுக்கவில்லை

நீ ஒரு அராபியன்; நீ ஒரு நாய்

கடவுள் உன்னைக் காப்பாற்றுவாராக அன்பைச் சுவைத்துப் பார் ஒளிக்கு வழி விடு

(தமிழில் இ. முருகையன்
நன்றி: பலஸ்தீனக் கவிதைகள் / எம். ஏ. நுஃமான்)