Archive for the ‘ஆசிரியர் தலையங்கம்’ Category

மக்கள் முன்னாலுள்ள சவால்கள்

Friday, July 9th, 2010

ஆசிரியர் தலையங்கம்

மக்கள் முன்னாலுள்ள சவால்கள்

வருட முற்பகுதியில் சனாதிபதித் தேர்தல் சொல்லிய செய்தியையே ஏப்ரல் மாதம் நடந்து முடிந்த பொதுத் தேர்தல் முடிவுகள் நாட்டின் எல்லாப் பகுதிகளிலும் மீளவும் சொல்லின.

போரை முடிவுக்குக் கொண்டு வந்ததற்கான நன்றியைச் சனாதி பதித் தேர்தலில் ராஜபக்சவின் தலைமைக்குக் காட்டியது போலவே சிங்கள மக்கள் பொதுத் தேர்தலிலும் நடந்துகொண்டனர். அரசாங்கத்தின் கொள்கைகளிலிருந்து தெளிவாக வேறுபடுத்தக்கூடிய மாற்றுக் கொள்கைகளோ நாட்டை மீளக் கட்டியெழுப்புவதற்கான மாற்று வேலைத்திட்டமோ இல்லாத எதிர்க் கட்சிகளால் மக்களுக்கு நம்பிக்கையூட்ட இயலவில்லை. அதற்கும் மேலாகச் சனாதிபதித் தேர்தலிற் பயன்பட்டவாறே, அரச ஊடகங்கள் உட்பட்ட அரச வளங்களும் அதிகார வலிமையும் வன்முறையும் மிரட்டலும் கேட்பாரின்றிப் பிரயோகிக்கப்பட்டன.

குறைந்ததொரு பாராளுமன்றப் பெரும்பான்மை வலிமையுடனேயே மூன்றிலிரண்டு பங்குப் பெரும்பான்மையை விலைக்கு வாங்கக் கூடிய ஒரு பாராளுமன்ற அரசியற் பின்புலம் இருக்கையில், ஏறத்தாழ மூன்றிலிரண்டு பங்குப் பெரும்பான்மையை வென்றுள்ள அரசாங்கம், மூன்றிலிரண்டு பெரும்பான்மைக்குத் தட்டுப்பாடாகவுள்ள ஆறு ஆசனங்கட்கு வலை வீச முன்னரே, தம்மை விற்பதற்கு ஆயத்தமென எதிர்க்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்கள் சைகை காட்டியுள்ளார்கள்.

சனாதிபதி குடும்பத்தின் ஆட்சியை நிரந்தரமாக்குவதற்கான பணிகள் இப்போது மும்முரமாக்கப்பட்டுள்ளன. வரப் போவதாக மிரட்டிக் கொண்டிருக்கும் தனிமனித, குடும்ப, கும்பல் ஃபாசிச சர்வாதிகார ஆட்சி வராமற் தடுக்கப் பாராளுமன்ற அரசியலையோ எதிர்க் கட்சி களையோ நம்பியிருக்க முடியாது. அதற்கெதிரான உறுதியான புரட்சிகர மாற்று அரசியல் வடிவம் ஒன்று விருத்தி செய்யப்படவேண்டும்.

சிங்கள மக்களைப் பீடித்திருக்கும் பாராளுமன்ற அரசியலிலிருந்து அவர்களை மீட்பதானால், சிங்கள முற்போக்கு, இடதுசாரிச் சக்திகள் அந்த அரசியலிருந்தும் என்.ஜி.ஓ. உறவுகளிலிருந்தும் தங்களைப் பூரணமாக மீட்டெடுத்துக் கொள்ள வேண்டும். சிங்கள மாக்சிச லெனினிசவாதிகள், தங்களை அமைப்புமுறையாகக் கட்டியெழுப்பி அரசியல் வேலைகளை முன்னெடுக்காமல், தவறான அரசியற் போக்குக்கட் கெதிராகப் போராட இயலாது. ஏதிர்வரவுள்ள நெருக்கடிமிக்க காலம், ஃபாசிச சர்வாதிகாரத்திற்குப் பணிந்து போவதற்கும் புரட்சிகர அமைப் பாக ஒழுங்கமைப்பதற்குமிடையே தெரிவு எதையும் விட்டுவைக்காது.

சிறுபான்மைத் தேசிய இனங்களைப் பொறுத்தவரை, அவர்கள் மீதான ஒடுக்குமுறை மோசமாவதற்கான வாய்ப்புக்களே அதிகம். அவர்களது பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தையும் குறைக்கும் முயற்சிகளில் அரசாங்கம் தீவிரமாக உள்ளது. அவர்களது பாராளுமன்றப் பிரதிநிதிகள் தங்களது சுயநலத்தைப் போணுவதற்காகத் தங்களது மக்களின் நலன்களை இதுவரை புறக்கணித்துக் காட்டிக் கொடுத்து வந்தது போலவே இனியும் நடப்பர் என்பதிலும் ஐயம் வேண்டாம். எனவே மாற்று அரசியலுக்கான தேவை சிங்கள மக்களை விட அவசரமாகத் தமிழ், முஸ்லிம், மலையகத் தமிழ் மக்களுக்கே உண்டு. அவ் வகையிற் சென்ற சில மாதங்களில் நடந்த தேர்தல்களில் அவர்கள், குறிப்பாகத் தமிழ் மக்கள், தேர்தல் பற்றிக் காட்டியுள்ள அக்கறையீனம் ஒரு சாதகமான அம்சமாகும். அது எவ்வாறு மாற்று அரசியலாக வளர்த்தெடுக்கப்படக் கூடும் என்பது அவர்களிடையேயுள்ள முற் போக்கு, இடதுசாரிச் சக்திகளின் கையிலேயே உள்ளது.

நாட்டின் பொருளாதார நெருக்கடியைப் பயன்படுத்தி அந்நிய ஊடுருவல் வலுத்து வருகிறது. முக்கியமாக, மனித உரிமை மீறல்கள், போர்க் குற்ற விசாரணை, ஐ.எம்.எவ். நிபந்தனைகள் என்ற வடிவங்களில் மேற்குலகும், வர்த்க உடன்படிக்கைகள் முலமும் தேசிய இனப் பிரச்சனையில் தலையீட்டின் மூலமும் இந்தியாவும், தங்கள் அரசியல், பொருளாதாரப் பிடிகளை வலுப்படுத்துகின்றன. யப்பானும் ஐரோப்பிய நாடுகளும் தமது பொருளாதாரப் பிடியை வலுப்படுத்தி வரும் அதே வேளை, சீனாவும் பல்வேறு உட்கட்டுமான, நிர்மாண, அபிவிருத்தி வேலைகளின் மூலம் தனது செல்வாக்கை வலுப்படுத்தி வருகிறது. இலங்கை அந்நிய மூலதனத்தினதும் ராணுவ-அரசியல் ஆதிக்கத்தின தும் போட்டிக்களமாகிச் சீரழிவதைத் தடுக்கவும் பிரதான முரண்பாடான தேசிய இனப் பிரச்சினையின் தீர்வு அடிப்படைத் தேவையாகிறது.

இந்த நிலையில் ஜூன் இறுதி வாரத்தில் நடந்து முடிந்த புதிய-ஜனநாயக மாக்சிச-லெனினிக் கட்சியின் ஐந்தாவது தேசிய மாநாடு மாற்று அரசியலுக்கும் மக்கள் போராட்டத்துக்குமான நம்பிக்கைகட்குப் புத்துயிரூட்டியுள்து. மாநாட்டு ஆவணங்களை இவ்விதழில் வழங்கு வதில் செம்பதாகை பெருமை கொள்கிறது.

மக்கள் முன்னுள்ள தெரிவுகள்

Saturday, April 3rd, 2010

இந்த ஆண்டின் பாராளுமன்றப் பொதுத் தேர்தல், சிங்கள மக்கள் நடுவே, மூன்று பேரினவாதக் கூட்டணிகளிடையிலான போட்டியாக வுள்ளது. அரசாங்கக் கூட்டணி ஜனாதிபதித் தேர்தலின் போது நடந்துகொண்ட விதமாகவே இத் தேர்தலிலும் அரசாங்க வளங்களைத் தவறாகப் பயன்படுத்துகிறது.

நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்சவின் பெரும் வெற்றி யூஎன்.பியையம் ஜே.வி.பியையும் கணிசமாகப் பாதித் துள்ளது. பொதுத் தேர்தலிலும் யூ.என்.பி. தன் அடையாளத்தைத் தவிர்த்தல் அதன் எதிர்காலத்ததைக் கடுமையாகப் பாதிக்கும் என்ற எண்ணம் யூஎன்.பியினுள் வலுவாகியது. யூ.என்.பியின் சின்னத்தின் கீழ்த் தேர்தலில் நின்றால், ஏற்கெனவே யூ.என்.பியுடன் கூட்டுச் சேர்ந்ததனாற் கவிழ்ந்த நம்பகத்தன்மையை முற்றாக இழக்க நேரும் என்ற அச்சம் ஜே.வி.பியினுள் வலுவாக இருந்தது. எனவே யூ.என்.பி.-ஜே.வி.பி. ஐக்கிய முன்னணி இயலாத ஒன்றாகி விட்டது.

ஜே.வி.பி. – சரத் பொன்சேகா உறவு ஜனாதிபதித் தேர்தல் அறிவிப்பு க்கு முன்பே இருந்து வந்தது என்பதை உறுதிப்படுத்தும் விதமாக, சரத் பொன்சேகா தலைமையில் ஜே.வி.பி;. வழிநடத்தும் இன்னொரு பேரினவாதத் தேர்தல் கூட்டணி உருவாகியுள்ளது. ஆனால், சரத் பொன்சேகாவின் கைதுக்கும் அவர் மீதான குற்றச்சாட்டுக்கட்கும் மேலாக, அவரையும் அவரது குடும்பத்தையும் தொடர்பு படுத்திய நிதி ஊழல் குற்றச்சாட்டுக்கள், அவரைப் புனிதராகக் காட்டி வாக்குச் சேகரிக்கும் கூட்டணிக்கு இடைஞ்சல்களை ஏற்படுத்தியுள்ளன.

இவ்வாறு, தென்னிலங்கையில் பேரினவாதத்தை எதிர்த்து நிற்கவும் அந்நிய மேலாதிக்கத்துக்கு எதிராக மக்களை அணிதிரட்டவும் வல்ல மாற்று அரசியல் அணியொன்றைக் கட்டியெழுப்பும் வாய்ப்பு இம் முறையும் தவறவிடப் பட்டுள்ளது. அதற்கான பொறுப்பு, குறுகிய தேசியவாதத் தலைமைகளையும் பாராளுமன்ற இடதுசாரிகளையும் மட்டுமன்றிச், சுயநல நோக்காற் பிளவுண்டு கிடக்கும் ட்ரொட்ஸ்கியக் கட்சிகளையும் கணிசமானளவு சாரும்.

இவ்விதமான அவலத்திடையே, முதலாளிய உலகமயமாக்கலைத் தடையின்றித் தொடர்வதற்கான நிலைமைகள் மேலும் கனிந்துள்ளன. அதற்கு வசதியாக மக்களின் ஜனநாயக உரிமைகளை மறுக்கும் பலவேறு செயற்பாடுகள் வலுப்பெற்றுள்ளன. அதன் ஒரு பகுதியாக ஊடகத் துறை மீதான நெருக்குவாரங்கள் வலுப்பட்டுள்ளன. காவல் துறை, முன்னெப்போதும் இல்லாதளவு, ஆளுங் கட்சியின் அரசியற் கருவியாக உள்ளது. இன்றைய ஆட்சி மீளுமாளால் அடக்குமுறைகள் மேலும் வலுப்படுவது உறுதி. அதே வேளை, பிரதான எதிரணிகள் இரண்டிடமும் ஜனநாயக மீட்புக்கான செயல் திட்டங்கள் இல்லை.

பலவீனமான பொருளாதாரம் மக்கள் மீது மேலும் சுமையேற்றும் போது, அரச அடக்குமுறை கூடும். ஏலவே வலுப்பட்டுள்ள ராணுவ பொலிஸ் அதிகார யந்திரங்கள் தமது செல்வாக்கு நலிவதற்கு இடங் கொடுக்கப் போவதில்லை. எல்லா விதமான அந்நியப் பொருளாதார ‘உதவிகளும்’ மக்கள் மீதான சுமைகளைக் கூட்டுமே ஒழியக் குறைக் காது என்பதை மனதிற் கொண்டால், இன்றைய சூழலில், மக்கள் பாரிய பொருளாதாரச் சுமைகட்கும் அடக்கு முறைக்கும் உட்படுவதை வரக்கூடிய எந்த ஆட்சியாலும் தவிர்க்க இயலாது என விளங்கும்.

இந்த நிலையில், எழக்கூடிய சிங்கள மக்களின் எதிர்ப்பைத் திசை திருப்பச் சிறுபான்மைத் தேசிய இனங்கள் மீது இன ஓடுக்கலை வலுப் படுத்தித் தேசிய இனப் பிரச்சனையைத் தீர்க்காமல் இழுத்தடிப்பது எந்தப் பேரினவாத அரசாங்கத்துக்கும் வசதியானதே. எனவே இலங் கையின் அரசியலில் ஒரு மாற்றுப் பாதைக்கான முன்னெடுப்பு மேலும் முக்கியமாகிறது.

இப் பாராளுமன்றத் தேர்தலில் ஒரு மாற்று அரசியல் பாதையை வலியுறுத்திப் போட்டியிடும் கட்சியாகப் புதிய-ஜனநாயகக் கட்சி மட்டுமே உள்ளது. ஜனாதிபதித் தேர்தலில் சிறுபான்மைத் தேசிய இனங்களதும் இடதுசாரிக் கட்சிகளதும் பொது வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்துமாறு புதிய-ஜனநாயகக் கட்சி விடுத்த கோரிக்கையைப் புறக்கணித்துத் தனித்துப் போட்டியிட்ட மூன்று ட்ரொட்ஸ்கியக் கட்சி களதும் அரசியல் அற்பத்தனத்தை மக்கள் தெளிவாகவே இனங்கண்டு கொண்டனர். அவ்வாறே, முற்றிலும் சுயநல நோக்கத்துடன், பிரதான வேட்பாளர்கள் இருவரில் ஒருவரையோ மற்றவரையோ ஆதரிக்கும்படி சிறுபான்மைத் தேசிய இனத் தலைமைகள் விடுத்த கோரிக்கைகளை மக்கள், குறிப்பாக வடக்கு-கிழக்கின் தமிழ் மக்கள், நிராகரித்தனர்.

புதிய-ஜனநாயகக் கட்சி இவ் விடயத்தில் நேர்மையாகவும் தெளிவா கவும் நடந்துள்ளது. சிறுபான்மைத் தேசிய இனங்களதும் இடதுசாரிக் கட்சிகளதும் பொது வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்த இயலாத நிலையில், மக்கள் தமது வாக்குச் சீட்டுக்களைப் பழுதாக்கி;த் தேர்த லை நிராகரிக்க வேண்டும் என அது மக்களைக் கேட்டுக் கொண்டது. வடக்கில் 80மூ மக்கள் வாக்களிக்காமல் தேர்தலை நிராகரித்ததை நாம் ஒரு ஆரோக்கியமான அறிகுறியாகக் கொள்ளலாம்.

இத்தகைய ஒரு சூழலிலே, பாராளுமன்றப் பாதை மூலம் ஒடுக்கப் பட்ட தேசிய இனங்களோ இலங்கையின் சுரண்டப்படும் உழைக்கும் மக்களோ விடுதலையோ விமோசனமோ பெற இயலாது என்ற தெளிவு டன் யாழ்ப்பாணத்திலும் மலையகத்திலும் புதிய-ஜனநாயகக் கட்சி தேர்தலிற் போட்டியிடுகிறது. தேர்தல் பிரசார வேலைகளைக் கூட மாற்று அரசியலுக்கான ஒரு தளத்தைக் கட்டியெழுப்பும் நோக்கிலேயே புதிய-ஜனநாயகக் கட்சி முன்னெடுத்து வந்துள்ளது.

தமிழ்த் தேசியவாதம் பேசிக்கொண்டு இந்திய அல்லது அமெரிக்கச் செய்நிரல்களை முன்னெடுக்கிற கட்சிகளினதோ அரசாங்கத் தரப்பை யோ யூ.என.பியையோ அண்டி நிற்கிற தமிழ், முஸ்லிம், மலையகத் தமிழ்க் கட்சிகளினதோ சந்தர்ப்பவாதக் கூட்டணிகளை ஏற்படுத்தத் தயங்காத சில இடதுசாரிக் கட்சிகளினதோ கொள்கை விளக்கங் களைப் புதிய-ஜனநாயகக் கட்சியின் தேர்தல் கொள்கை விளக்கத் துடன் ஒப்பிட்டுப் பார்த்தால், புதிய-ஜனநாயகக் கட்சி மட்டுமே, தனது இலக்குக்களையும் வேலைத் திட்டத்தையும் பற்றி ஒளிவுமறைவின்றிப் பேசுவதுடன் மக்கள் அரசியலை முன்னெடுக்கும் நோக்குடையது என்பது தெளிவாகும்.

நாட்டை எந்தக் கட்சியோ கூட்டணியோ ஆண்ட போதும், வடக்கு-கிழக்கில் அரசாங்கம், இந்தியப் படைகள், விடுதலைப் புலிகள் என யாருடைய ஆதிக்கம் நிலவிய போதும், தனது கொள்கையிலோ நிலைப்பாட்டிலோ விட்டுக்கொடுப்பின்றி உறுதியாக இருந்துவந்த கட்சி என்ற வகையிலும், மலையகத் தமிழரின் கல்வி, தொழில், பிரதேசம், தேசிய இன உரிமை என்பவற்றுக்காகவும் தோட்டத் தொழிலாளரின் நியாயமான ஊதியத்திற்காகவும் சந்தர்ப்பவாதக் கட்சிகளின் காட்டிக் கொடுப்புக்களின் நடுவிலும் உறுதியாகப் போராடி வந்த கட்சி என்ற வகையிலும், மக்களுக்கான மாற்று அரசியல் பாதையை முன்னெ டுக்கவும் வரவுள்ள காலத்தில் இலங்கையில் உருவாகக்கூடிய பிற ஏகாதிபத்திய விரோதச் சக்திகளுடன் தோளோடு தோள் நின்று போராடக் கூடிய அதி முக்கிய அமைப்பாகப் புதிய-ஜனநாயகக் கட்சியே மக்கள் முன்னுள்ளது.

யாழ்ப்பாணம், நுவரெலியா மாவட்டங்களிற் போட்டியிடும் புதிய ஜனநாகக் கட்சி வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்வதன் மூலம்  மக்கள் மாற்று அரசியற் பாதை ஒன்றன் உருவாக்கத்தைப் பெரிதும் ஊக்குவிப்போராவர்.

தெரிவேதுமற்ற ஒரு தேர்தலில் மக்கள் முன்னுள்ள சரியான தெரிவு

Tuesday, January 26th, 2010

கடந்த 31 வருடங்களாக நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சி முறையில் நாடும் மக்களும் பல பொருளாதார நெருக்கடிகட்கும் அரசியல் அடக்குமுறைகட்கும் அநீதிகட்கும் அழிவுகட்கும் முகங் கொடுத்துள்ளனர். மூன்று தசாப்த காலப் பேரினவாத முதலாளித்துவ யுத்தத்திற்கும் தமிழ் மக்கள் நடுவே எழுந்த ஆயுத எழுச்சி;கட்கும் இந்த நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையே மூல காரணமாகும். முதலாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி யுத்தத்தைத் தொடக்கி வைத்தார். யுத்தத்தை முடித்துத் தமிழ் மக்களின் இரத்த வெள்ளத்தில் வெற்றி விழாக் கொண்டடும் தற்போதைய நிறைவேற்று அதிகார ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும் யுத்தத்தைக் கொடூரமாக நடத்தி முடிவுக்குக் கொண்டுவந்த இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவும் இன்று ஜனாதிபதி தேர்தலில் எதிரெதிராக நிற்கிறார்கள். இருவருமே நாட்டின் உழைக்கும் மக்களினதும் தமிழ், முஸ்லிம், மலையகத் தமிழ்த் தேசிய இனங்களினதும் அபிலாட்சைகளை நிறைவேற்;ற மாட்டாதவர்கள். மக்களின் பொது எதிரிகளான இரு பிரதான வேட்பாளர்களில் யாரை ஆதரிப்பது எனத் தீர்மானிப்பதும் தனித்துச் சென்று யாரும் தன்னையே வேட்பாளராக அறிவிப்பதும் அரசியல் வறுமையினதும் சுயநல அரசியலினதும் அடையாளமே.
ஒரு பொது வேட்பாளர் பற்றி உடன்படுமாறு தமிழ், முஸ்லிம், மலையகத் தமிழர் கட்சிகளையும் இடதுசாரிக் கட்சிகளையும் வேண்டிக் கொண்ட புதிய-ஜனநாயகக் கட்சி, அடுத்து வரும் ஜனாதிபதித் தேர்தலில் மக்கள், குறிப்பாகச் சிறுபான்மைத் தேசிய இனத்தவர், தமது வாக்குச் சீட்டுக்களைப் பழுதாக்கவேண்டுமென்று கேட்டுள்ளது. அதற்கான விளக்கம்; அடுத்தடுத்து வந்த இரண்டு கட்சி அறிக்கைகளில் தெளிவாக உள்ளது.
8.12.2009 அன்று வெளியான அறிக்கையில் “தமிழ், முஸ்லிம், மலையக மக்களின் பிரச்சினைகளைத் தெளிவான கோரிக்கைகளாக முன்வைத்துப் பொது வேலைத்திட்டத்தின் கீழ் ஐக்கியப்பட்ட பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதே இன்றைய சூழலில் சிறுபான்மைக் கட்சிகளுக்கும் இடதுசாரிக் கட்சிகளுக்கும் உள்ள சரியான தெரிவாக இருக்க முடியும்”  எனப் புதிய-ஜனநாயகக் கட்சி வற்புறுத்தியது. நவெம்பர் பிற்பகுதியில் சூரிச் நகரிற் கூடி மாநாடு நடாத்திய தமிழ், முஸ்லிம், மலையகத் தமிழ்க் கட்சிகளால் ஏன் ஒரு பொது வேட்பாளரை ஜனாதிபதித் தேர்தலில் நிறுத்த முடியவில்லை எனவும் அவ் அறிக்கையி;ல் கட்சி கேட்டிருந்தது.

அதன் மூலம் எப் பிரதான வேட்பாளருக்கும் 50% வாக்குகள் பெறமுடியாத நிலையை ஏற்படுத்தி அதனால் ஒரு அரசியல் யாப்பு நெருக்கடியையும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைக்கு ஒரு இக்கட்டான நிலையையும் தோற்றுவிக்கலாம் எனவும் சுட்டிக்காட்டியது.  அதன் அடிப்படையில் சிறுபான்மைத் தேசிய இனக் கட்சிகளதும் இடதுசாரிக் கட்சிகளதும் சார்பில் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவற்குப் பேச்சுவார்த்தை நடாத்தி முடிவுக்கு வர இன்னும் காலம் கடந்துவிடவில்லை எனவும் வலியுறுத்தப்பட்டது.
ஆனால் அது நடக்கவில்லை. எனவே “எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் எந்தவொரு வேட்பாளருக்கும் மக்கள் வாக்களிக்காது வாக்குச் சீட்டை செல்லுபடியற்றதாக்க வேண்டும். அதன் மூலம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட சர்வாதிகார ஜனாதிபதி முறையை நிராகரித்து ஒழிப்பதற்கான வெகுஜன எதிர்ப்பியக்கத்தை முன்னெடுக்க வேண்டும்” எனவும் “அவ்வாறு செய்வதன் மூலம் முப்பத்தியொரு வருடமாக இருந்து வரும் தனிநபர் சர்வாதிகார ஜனாதிபதி ஆட்சிமுறைக்குத் தமது எதிர்ப்பை அனைத்து மக்களும், குறிப்பாகக் தமிழ், முஸ்லீம், மலையகத் தமிழ் மக்கள், வெளிப்படுத்த வேண்டும்”  எனப் புதிய-ஜனநாயகக் கட்சி மத்திய குழு முடிவுசெய்ததைக் கட்சியின் 18.12.2009 திகதி அறிக்கை கூறியது.

தனியொரு வேட்பாளரை நிறுத்தி ஜனாதிபதி முறைக்கு ஒரு அரசியல் யாப்பு நெருக்கடியை உருவாக்கி அதில் மாற்றம் கொண்டுவர நிர்ப்பந்திக்கவும்; மக்களிடையே அரசியல் விழிப்பையும் வெகுஜன பலத்தையும் கட்டியெழுப்பியிருக்கவும் முடிந்திருக்கும் என்ற கருத்தைப் புறக்கணித்துப் பிரதான வேட்பாளர்களில் ஒருவரைத் தேர்ந்தெடுக்கத் துடிக்கும் சிறுபான்மைத் தேசிய இனக் கட்சிகள் தமது சுயநல அரசியலுக்காக மக்களுக்குப் பெரும் துரோகம்; செய்கிறார்கள்.

ஒரு பேரினவாதியைத் திரிபுவாதிகளும் பழைய ட்ரொட்ஸ்கியவாதக் கட்சியும ஆதரிக்கின்றன. போலி இடதுசாரி ஜே.வி.பி. மற்றப் பேரினவாதியை ஆதரிக்கிறது. ‘புரட்சி’  பேசும் ட்ரொட்ஸ்கியவாதிகள்  மூவர் தங்களுக்குப் பழக்கப்பட்ட தன்முனைப்புடன் பொது வேட்பாளரை நிறுத்தம் முயற்சிக்கு ஆப்புவைத்துள்ளன.

எனவே மக்கள் முன்னுள்ள ஒரே தெரிவு, இத் தேர்தலில் எல்லாக் கயமைகளையும் நிராகரித்துச் சர்வாதிகார ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்கான வெகுஜன எதிர்ப்பியக்கத்தை முன்னெடுப்பதாகிறது.

செம்பதாகை மீண்டும் எழுகிறது

Tuesday, January 26th, 2010

புதிய-ஜனநாயகக் கட்சி இலங்கைக் கம்யூனிஸ்ற்கட்சி (இடது) என்ற பேரில் 1978ம் ஆண்டின் நடுப் பகுதியில் நிறுவப்பட்டது. அதன் தமிழ் மாத ஏடாகச் ‘செம்பதாகை’ யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்தது. 1989ம் ஆண்டிலிருந்து “புதிய பூமி” அதன் வெகுஜன மாத ஏடாக வெளிவந்தது. செம்பதாகையை அதன் அரசியற் தத்துவார்த்தக் ஆக்கங்கட்கான ஏடாக வெளியிட முடிவெடுக்கப்பட்டது. 1991ல் நமது கட்சி தனது பேரைப் புதிய-ஜனநாயகக் கட்சி என்று மாற்றியது.

1980களின் போது, யாழ் குடாநாட்டுச் சூழ்நிலைகள் துரிதமாக மோசமடைந்தன. அதன் பயனாக, அங்கிருந்து வெளிவெளியாக இடதுசாரி அரசியற் பணிகளை மட்டுமன்றிக் குறிப்பிட்ட ஒரு வகையான தமிழ்த் தேசியவாதந் தவிர்ந்த தமிழ்த் தேசியவாத அரசியற் பணிகளையுமே மேற்கொள்ள இயலாத சூழ்நிலை ஏற்பட்டது. அரசாங்கச் சார்புக் கெடுபிடிகளை ஓருபுறமும் விடுதலைப் புலிகளின் கெடுபிடிகளை மறுபுறமுஞ் சமாளித்தே நிலைத்துவந்த புதிய-ஜனநாயகக் கட்சி, இன்று வரை, எந்தத் தரப்பிற்கும் விட்டுக்கொடுப்பின்றிச் செயற்பட்டு வந்துள்ளது. பலவாறான வெளி இடைஞ்சல்களாலும் நிதி நெருக்கடிகளாலும் புதிய பூமியை மட்டுமே நமது கட்சியால் இடைவிட்டேனும் வெளியிடக் கூடியதாய் இருந்தது. செம்பதாகையை மூன்று இதழ்களுடன் நிறுத்த நேர்ந்தது.
1995ம் ஆண்டளவிற் புதிய பூமி கொழும்பிலிருந்து ஓரளவு ஒழுங்காக வெளிவரத் தொடங்கிய பின்னர், தமிழரல்லாதோரை எட்டும் நோக்கில், 1999ம் ஆண்டு முதலாகக், கட்சியின் ஆங்கிலக் காலாண்டு ஏடாக “நியூ டெமோகிரஸி” (New Democrecy) வெளிவரத் தொடங்கியது. நின்று போன செம்பதாகையிற் போன்று முக்கியமான அரசியற் தத்துவார்த்தக் கட்டுரைகள் அதிற் பிரசுரமாயின. அது போல ஒரு ஏடு தமிழிலுந் தேவை என்று சில ஆண்டுகள் முன்னம் பலர் கருத்துத் தெரிவித்த போதும், நிதி நிலைமைகள் அதற்கு ஏதுவாக இருக்கவில்லை.

புதிய-ஜனநாயகக் கட்சியின் இணையத்தளம் 2006ம் ஆண்டு தொடக்கப்பட்ட பின்பு,  நியூ டெமொக்றஸியினதும் புதிய பூமியினதும் இணையத்தளப் பதிப்புக்கள் அதில் வெளிவந்தன. அவற்றுக்குக் கிடைத்து வந்துள்ள வரவேற்பின் அடிப்படையிலேயே செம்பதாகையை ஒரு இணையத்தள ஏடாகத் தொடங்க முடிவெடுக்கப்பட்டது. இந்த அறிமுக இதழை அடுத்துச் செம்பதாகை பல்வேறு சமூக, அரசியல், தத்துவார்த்த விடயங்களையும் உலக நிகழ்வுகளையும் உள்ளடக்கி வெளிவரும்.

பிரதான முரண்பாடான தேசிய முரண்பாடு போராக மாறி 26 ஆண்டுகளின் பின்பு, அப் போர் கொடுமையான ஒரு முடிவைக் கண்டுள்ளது. போரின் முடிவு தேசிய முரண்பாட்டை மேலுந் தீவிரப்படுத்தியுள்ளதே ஒழியத் தேசிய இனப் பிரச்சனைக்குத் தீர்வைத் தேட வழி காட்டவில்லை. போராற் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் அவலமோ சொல்லி மாளாதது. போரின் இறுதிக் கட்டங்களிற் கொல்லப்பட்டோர் தொகை 30,000 அளவிலெனப் பலராலும் மதிப்பிடப்பட்டுள்ள போதும் இறந்தோரின் எண்ணிக்கை அறியப் படாமலே உள்ளது. விடுதலைப் புலிகளின் தரப்பிலும் அரசாங்கப் படைகளின் தரப்பிலும் இறந்தோர் தொகைகள் அறிவிக்கப் படாமலே உள்ளன. முட்கம்பி வேலிகளின் பின்னால் ஏறத்தாழ 300,000 பேர் மறித்து வைக்கப் பட்டுள்ளனர்.

அங்கவீனமானோரின் தொகை 30,000 வரையிலென மதிப்பிடப் பட்டுள்ளது. அகதி முகாங்களில் வாழ்வோர் இயற்கையின் சீற்றத்துக்கு முகங் கொடுத்து முதலில் வெய்யிலிலும் பின்பு கடும் மழை வெள்ளத்திலும் அடிப்படைச் சுகாதார வசதிகள் இன்றியும் பலவிதமான பற்றாக்குறைகளின் இடையிலும் அல்லற்பட்டு அடிமை வாழ்வு வாழுகின்றனர். போரால் விளைந்த அவலத்தினிடையே, போர் வெற்றிக் களிப்பிலுள்ள அரசாங்கம் அவர்களை விடுவித்து இயல்பு வாழ்வுக்கு மீட்க அக்கறை காட்டுவதாகத் தெரியவில்லை. தமிழ்த் தேசியவாதிகள் உட்பட்ட பிற அரசியற் கட்சிகளும் இவ் விடயத்தைப் போதியளவு வற்புறுத்திப் பேசுவதாகத் தெரியவில்லை. யாழ்ப்பாண மாநகர மக்களும் வவுனியா நகர மக்களும் கடந்த தேர்தலில் தமது எதிர்ப்பைப் புறக்கணிப்பாகக் காட்டிய பின்னரே தமிழ்த் தலைவர்கள் சிலர் மறித்து வைக்கப் பட்டுள்ளவர்களை விடுவிப்பது பற்றிச் சிறிது பேசுகின்றனர். எனினும் எதையுஞ் செயலில் நடத்த அவர்கள் ஆயத்தமாக இல்லை. அவர்கள் இன்னமும் தமிழரின் சார்பாகக் குறுக்கிடுமாறு அந்நிய நாடுகளைத் துண்டலாம் என்ற நப்பாசையில் இருக்கின்றனர். தனக்கு எதிராக எழக்கூடிய எந்தப் பாரிய சவாலையும் அகற்றுவதில் அரசாங்கந் தீவிரமாக உள்ளது. மனித உரிமைகளும் ஜனநாயக உரிமைகளும் அதற்கு ஒரு பொருட்டல்ல. எதிர்க் கட்சிகளும் ஊடகங்களும் தொழிற் சங்கங்களும் பிற வெகுஜன அமைப்புக்களும் கடும் ஒடுக்குமுறையை எதிர்நோக்குகின்றன. போரின் விளைவாக மக்கள் முகங்கொடுக்க நேரும் அரசியற், பொருளாதார யதார்த்தங்களின் விளைவாகத் துரித வளர்ச்சி பெறக்கூடிய சிங்கள இடதுசாரிப் போக்குப் பற்றியும் அரசாங்கம் விழிப்புடன் உள்ளது. அவசரகாலச் சட்டத்தின் கீழும் பயங்கரவாத விரோதச் சட்டங்களின் கீழுஞ், சிறையிலிடல் உட்பட்ட தொல்லைகளை அது பயன்படுத்துகிறது. 2002ம் ஆண்டின் போர் நிறுத்தத்திற்குப் பின்பான சற்று நெகிழ்வான அரசியற் சூழலின் புதிய-ஜனநாயகக் கட்சியாற் கூடிய தெலைவுகளை எட்டக் கூடியதாக இருந்தது. புதிய நட்புச் சக்திகளைப் பெற முடிந்தது.

2006ல் போர் மும்முரமாக்கப்பட்ட பின்பான பெருமளவும் ஜனநாயகமற்ற சூழலிற், கட்சித் தோழர்களும் சிங்கள இடதுசாரிகளும்; எதுவித நியாயமுமின்றி அவசரகாலச் சட்டத்தின் கீழும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழும் தொடர்ந்தும் மறியலில் வைக்கப் பட்டுள்ளனர். நாட்டில் ஜனநாயகமும் கருத்துச் சுதந்திரமும் மனித உரிமைகளுங் கடும் தெருக்கடியை எதிர் நோக்குகின்றன. தேசிய இன ஒடுக்கல் முன்னிலும் மோசமாகும் வாய்ப்பு வலுப்பட்டுள்ளது. பேரினவாதிகள் சகல தேசிய இனத்தவரிடமும் இன்று வலுச்சண்டைக்குப் போகுமளவுக்கு நிலைமைகள் மோசமாகி வருகையிற், தேசிய இனப் பிரச்சனையின் அமைதியான தீர்வுக்கான வாய்ப்புக்கள் குறைகின்றன. கடந்த காலத்திற் தேசிய இனப் பிரச்சனை போராகியதற்கு அந்நியக் குறுக்கீடுகள் பங்களித்தன. பலவாறான காரணங்களைக் காட்டி ஏகாதிபத்தியவாதிகளும் இந்திய மேலாதிக்கச் சக்திகளும் ஊடுருவிக் குறுக்கிடும் வாய்ப்பு இன்று அதிகமாகி உள்ளது. மனித உரிமைகள், ஊடக சுதந்திரம், ஜனநாயகம், தேசிய இன உரிமைகள் என்பன மீறப்படுதலைப் பற்றி மேலை நாடுகள் இடையிடையே விமர்சித்தாலும், அதைப் பற்றி அவை எதையுமே செய்யப் போவதில்லை. ஏகாதிபத்திய உலகமயமாக்கலை மறுத்துச் செயற்படுவதை மட்டுமே அவை ஏற்க மாட்டா. இவ் விடயத்தில் இலங்கை அரசாங்கமும் அவற்றின் ஆணையை மீறாது. சர்வதேச நாணய நிதியத்திடம் 260 கோடி டொலர் கடனாகப் பெறுவதற்கான உடன்பாடு அதற்குச் சான்று. இப் பின்னணியில், இடதுசாரிகள் செய்ய வேண்டியவை நிறைய உள்ளன. நாட்டின் பிரதான முரண்பாடாகத் தெடரும் தேசிய இனப் பிரச்சனையை அந்நியத் தலையீட்டுக்காரர் தமக்கு வாய்ப்பாக மீண்டும் பயன்படுத்தாதபடி அதைப் புதிய பார்வையில் நோக்கி நாட்டின் ஊடக, கருத்துச் சுதந்திரங்களையும் ஜனநாயக, மனித உரிமைகளையும் மட்டுமன்றி மக்களின் வாழ்வாதார உரிமைகளையும் மீட்க ஒரு போராட்டம் முன்னெடுக்கப்பட வேண்டியுள்ளது. மேற்கூறிய உடனடித் தேவையை முன்வைத்தே செம்பதாகை தனது சமூக-அரசியல்-தத்துவார்த்த ஆய்வுகளை விரிவாக முன்னெடுக்கும். செம்பதாகையை அச்சு வடிவிற் கொண்டுவரும் நமது இலக்கை விரைவில் நனவாக்கச், செம்பதாகை வாசகர்களும் புதிய-ஜனநாயகக் கட்சியின் நண்பர்களும் உதவுவார்களென நம்புகிறோம்.